பண்பாட்டு வரலாற்றில் மண்பானைகள்

மனித வாழ்க்கைக்கு அவசியமான உணவு அளிக்கும் உழவுத் தொழிலுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்.
பண்பாட்டு வரலாற்றில் மண்பானைகள்


மனித வாழ்க்கைக்கு அவசியமான உணவு அளிக்கும் உழவுத் தொழிலுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். இந்தப் பண்டிகையில் மண்பானைகள் முக்கிய இடம் பெறுவதை உணர்கிறோம்.

பொங்கல் பண்டிகை, இறைவழிபாடுகளின்போது மட்பாண்டம் என்ற மண்பானை முக்கிய இடம் பெறுகிறது. மனிதர்கள் நாகரிகம் அடைவதற்கு முன் உணவு உற்பத்தி செய்ய தொடங்கிய புதிய கற்காலத்தில் அன்றாட தேவைகளுக்கு கையால் செய்யப்பட்ட பானைகளை வடிவமைத்து வெயிலில் காயவைத்து பயன்படுத்தினர். இத்தகைய பானைகள், பானை ஒடுகள் புதிய கற்கால அகழ்வராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.

இதையடுத்து, இரும்புக் காலத்தில் மனிதர்கள் முன்னேற்றம் அடைந்து, சக்கரத்தில் வைத்து வனையப்பட்ட பானைகளைச் செய்து சூளையில் வைத்து சுட்டு பயன்படுத்தினர். இந்தக் காலத்தைச் சேர்ந்த பானைகள் தமிழ்நாடு முழுமையிலும் தொன்மைச் சிறப்புமிக்க இடங்களில் கிடைக்கின்றன.

சூளையில் வைத்து சுடும் பொழுது பானையின் உட்பகுதி கறுப்பு நிறமாகவும், வெளிப்பகுதி சிவப்பு நிறமாகவும் காணப்படும். இத்தகைய பானைகளையும், பானை ஓடுகளையும் "கறுப்பு - சிவப்பு பானை' என அழைப்பர். இந்தக் காலத்தில் மனிதர்கள் பெரிதும் நாகரிகம் அடைந்த நிலையில் எழுத்துகளையும் தங்களது பெயர்களையும் பானைகள் மீது பொறிக்கும் நிலைக்கு உயர்ந்தனர். பானை மீது பொறிக்கப்பட்ட எழுத்துகளானது பண்டைய தமிழ் எழுத்துகளாக 2,500 ஆண்டுகள் பழமை உடையதாக விளங்குகின்றன.

பொதுவாக, தொல்லியல் ஆய்வில் பானை ஓடுகள் அரிய அடிப்படை வரலாற்றுச் சான்றுகளாக விளங்குகின்றன. அதுமட்டுமல்லாமல், தமிழ் எழுத்துகளின் வளர்ச்சியை அறிவதற்கும் தமிழ் மொழியின் தொன்மைச் சிறப்பை அறிய இவை பெரிதும் உதவுகின்றன.

கீழடி, கொடுமணல், கொற்கை, மாங்குடி, அழகன் குளம், வல்லம், உறையூர், கருவூர், அரிக்கமேடு, தேரிருவேலி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் பண்டைய தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஒடுகள் கிடைத்துள்ளன. யவனம், சீனம் போன்ற அயல்நாடுகளுடன் தமிழர்கள் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பை அறிந்துகொள்ள அரிட்டைன், ரெளலடட், ஆம்பொரா, சீன நாட்டு பானை ஓடுகள் போன்றவை தனிச் சிறப்பு வாய்ந்த பானை ஓடுகள் அமைகின்றன.

வேட்கோவர் இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்பானைகளை உருவாக்கும் குயவர்கள் இன்றும் அனைத்து ஊர்களிலும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றனர். நிகழ்ச்சிகளிலும், சடங்குகளிலும் மண்பானைகள் முக்கிய இடம் பெறுகின்றன. கோயில்களில் இறைவனுக்கு மண்பானையிலேயே அமுது செய்யப்பட்டு படைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்பானைகளை உருவாக்கும் குயவர்கள் வேட்கோவர், வேள்கோ, மண்ணுடையான் என்றெல்லாம் குறிப்பிடப்படுகின்றனர். சங்க இலக்கியங்களில் வேட்கோவர்களைப் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன.

குடவோலை பண்டைய நாளில் கிராம சபையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஓட்டு பெட்டிகளாக மண்பானைகள் பயன்பட்டதாக அகநானூறு கூறுகிறது. இதனை உத்திரமேரூர் கல்வெட்டு "குடவோலை முறை எனச் சிறப்பித்துக் கூறுகிறது.

கோயில்களுக்கு வேண்டிய பானைகள், குடங்கள், சட்டிகள், கலசங்கள், அகல் விளக்குகள் போன்றவற்றையும் செய்து அளித்திருக்கின்றனர். குயவர்களின் நலனுக்காக நிலங்கள் அளிக்கப்பட்டன. அவ்வாறு அளிக்கப்பட்ட நிலங்கள் குசக்காணி, குசபட்டி, குசவன் நிலம், குலாலவிருத்தி என்றெல்லாம் அழைக்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல் பண்டைய நாளில் இறந்தவர்களை தாழிகளின் உள்ளே வைத்து புதைக்கும் பழக்கம் இருந்துள்ளது. முதுமக்கள் தாழிகளையும் அவற்றையும், பெரிய மண்பானைகளையும் செய்து அளித்துள்ளனர்.

"கலஞ்செய்கோவே, கலஞ்செய்கோவே (புறம் 228)' என்று அவர்களை சங்க இலக்கியமான புறநானூறு குறிப்பிடுகிறது.

பண்டைய நாளில் மண்பாண்டத் தொழில் பெருமளவில் நடைபெற்று வந்ததால் குசக்காணம், சக்கரகாணிக்கை, திரிகை ஆயம் போன்ற வரிகள் விதிக்கப்பட்டதை கல்வெட்டுகள் அளிக்கும் செய்தியினால் அறிய முடிகிறது. வேட்கோவர்களின் பெருமை பற்றிய அறியவும் சான்று உள்ளது.

நாகப்பட்டினத்தில் "சூளாமணி புத்த விகாரம்' அமைக்க முதலாம் இராஜராஜசோழனால் "ஆனைமங்கலம்' என்ற ஊர் தானமாக அளிக்கப்பட்டது. அப்பொழுது அந்தப் பகுதியில் எல்லைகளை வரையறுத்து அரசனுக்கு கையொப்பம் இட்டு தெரிவித்ததை இந்தப் பகுதியில் உள்ள ஊர்களைச் சேர்ந்த வேட்கோவர்கள் பலர் கையொப்பம் போட்டிருக்கின்றனர். அவர்களின் பெயர்கள் ஆனைமங்கல செப்பேட்டில் இடம் பெற்றுள்ளது பெருமை அளிக்கக் கூடியதாக விளங்குகிறது.

இதேபோன்று வேட்கோவர்கள் திருமீயச்சூர் போன்று பல கோயில்களுக்கு விளக்கு எரிக்க தானம் அளித்த செய்திகளும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

தமிழக வரலாற்றில் தொன்று தொட்டு பல்வகையான மட்பாண்டங்கள் வரலாற்றுச் சிறப்பு உடையதையும், அதனை செய்து அளிக்கின்ற கேட்கோவர்களும் பெருமை பெற்று விளங்கியிருக்கின்றனர்.

- கி. ஸ்ரீதரன், தொல்லியல் துறை (பணி நிறைவு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com