"பரியேறும் பெருமாள்', "கர்ணன்', "மாமன்னன்', ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்து "வாழை' படத்தையும் இயக்கி முடித்துள்ளார். தொடர்ந்து அவர் இயக்க உள்ள 5}ஆவது படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. கபடி விளையாட்டை மையப்படுத்திய உண்மை கதையாக இப்படம் உருவாக உள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இது தொடர்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில்... ""பரியேறும் பெருமாள்' படம் பா.ரஞ்சித்துடன் நான் இணைந்த முதல் திரைப்படம். இப்படம் இவ்வளவு உயரம் எட்டியதற்கு பா.ரஞ்சித்தும் ஒரு முக்கிய காரணம். என்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு அது ஒரு படிக்கல்லாக அமைந்தது. அவருடன் மீண்டும் ஒரு முறை இணைந்து பணியாற்றுவது உற்சாகத்தை அளிக்கிறது.
இந்த திரைப்படம் கபடி என்னும் விளையாட்டின் வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இருக்கும். மேலும் துருவுடன் இணைந்து பணியாற்றுவது என்பதும் மகிழ்ச்சி.
இந்தத் திரைப்படத்தில் வலிமையாகவும், திறமையான இளைஞனாகவும் துருவ் விக்ரம் வித்தியாசமான கோணத்தில் திரையில் தோன்றுவார். இந்த திரைப்படம் முக்கியமான மைல் கல்லாக இருக்கும். திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது'' என்றார்.