விமானம் எப்போதும் பிரமிப்பைத் தரும். எப்படியாவது ஒருமுறையேனும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது பலருடைய கனவாக இருந்தது.
இன்று சாதாரண, நடுத்தர மக்களும் எளிதாகப் பயணிக்கும் அளவுக்கு இந்திய விமானத் துறை வளர்ந்து வருகிறது. இதற்காக, மத்திய அரசின் விமானப் போக்குவரத்துத் துறையானது கொள்கைகளை வகுத்து வருகிறது. இதில், ஒரு மணி நேரத்துக்கு குறைவான பயண நேரம் கொண்ட விமானச் சேவைக்கு ரூ.2,500-க்கு குறைவாக வசூலிக்க ஆணையிட்டுள்ளது.
மேலும், பல்வேறு விமான நிறுவனங்கள் விமானப் போக்குவரத்துக்கு சலுகை கட்டணத்தை அறிவிக்கின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளால் நடுத்தர மக்களும் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது அதிகமாகும். இன்னும் இதுபோன்ற முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும். இந்திய விமானப் போக்குவரத்துத் துறையை பற்றிய சில தகவல்கள்:
இந்தியாவில் விமானச் சேவை தொடங்கப்பட்ட 1911-ஆம் ஆண்டு முதல் பயணிகள் விமானம் அலகாபாத், நயினிக்கு இடையே விடப்பட்டது. இவ்விரண்டு ஊர்களுக்கும் இடையே உள்ள தூரம் 6 கிலோ மீட்டராகும்.
1912-ஆம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தினர் தினம்தோறும் கராச்சிக்கும் மெட்ராஸூக்கும் இடையே ஏர்மைல் சேவையை ஆரம்பித்தனர். இதுவே இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது விமான நிறுவனமாகும்.
உலகத்திலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையம் அமெரிக்காவில் உள்ள ஹார்ட்ஸ்பீல்டு ஜாக்ஸன் அட்லாண்டாஇண்டர் நேஷனல் விமான நிலையம்.
ஆண்டுக்கு இங்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 9 கோடியே 54 லட்சத்து 62 ஆயிரத்து 867 ஆகும்.
தில்லி விமான நிலையத்தில் ஆண்டுக்கு 2.5 கோடி முதல் 4 கோடி பயணிகள் வரை வந்து செல்கின்றனர். தில்லி விமான நிலையத்தில் 58 உள்நாட்டு முனையமும், 62 பன்னாட்டு முனையமும் உள்ளன. இங்கு ஒரு மணி நேரத்துக்கு 73 விமானங்கள் வந்து செல்கின்றன.
நாட்டில் பரபரப்பான விமான நிலையம் தில்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம். இந்திய விமானப் போக்குவரத்துத் துறையானது 17 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது.