சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி வரும் "ராபர்'. இப்படத்திற்கு "மெட்ரோ' திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மெட்ரோ சத்யா, தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ட்ராயன், டேனி போப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் சென்னைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன்தான் இக்கதையின் நாயகன்.
ஒரு கிராமத்திலிருந்து சென்னையை நோக்கி வேலை தேடி வருகிறான் நாயகன். சென்னையின் பகட்டும் பளபளப்பும் அவனைக் கவர்கின்றன. மாநகர மக்களின் ஆடம்பர வாழ்க்கை மேல் அவனுக்குப் பிரமிப்பும் ஈர்ப்பும் வருகின்றன. தானும் இது போல் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆசை வெட்கம் அறியாது; அதை அடையும் வழியின் ஆபத்தையும் உணராது.
நாயகன் தன் விருப்பத்தை அடையும் வழி கடினமாக இருக்கவே குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்கிறான். உலக மக்களின் துன்பங்களுக்குக் காரணம் ஆசையே என்றார் புத்தர். நிலத்தில் விளையும் களைகள் பயிர்களைப் பாதிக்கின்றன; மனதில் விளையும் ஆசைகள் மனிதனின் குண நலன்களைப் பாதிக்கின்றன.
நாயகனின் ஆசை பேராசையாகி வெறியாக மாறுகிறது. அவனது குறுக்கு வழி திருட்டு வழியாக மாறுகிறது. அவன் திருட்டுத் தொழிலில் இறங்குகிறான். நாயகன் தேர்ந்தெடுத்த பாதை அவன் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதே படத்தின் கதை'' என்றார் இயக்குநர்.