ராஜ் பீக்காக் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வெளிவந்துள்ள படம் "நின்னு விளையாடு'. டான்ஸ் மாஸ்டர் தினேஷ்குமார் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நந்தனா ஆனந்த் நடிக்கிறார். தீபா சங்கர், பழ. கருப்பையா, பசங்க சிவகுமார், சாவித்திரி, சங்கவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் சி. சௌந்தரராஜன்.
படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""உண்மையில் இன்றைய எங்கள் தலைமுறைக்கான அரசியல் என்பது, உலக மயமாக்கலுக்குப் பிறகான குழப்பமான அரசியல். அதை கலைந்து பார்ப்பதற்கான ஒரு களமாக ஜல்லிக்கட்டு போராட்டத்தை நான் பார்த்தேன். அதை விட அதிகாரமும், வெளிநாட்டு நிறுவனங்களும் நம் மீது நிகழ்த்திய அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டமாகவும் இது இருந்தது என்பதுதான் நிஜம். அதைத்தான் போராட்ட களம் வெளிப்படுத்தியது. மெரீனா மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுக்கவே கோலா கம்பெனிகளுக்கு எதிரான தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டதே, அதற்கு சாட்சி. கூடவே கறுகும் பயிர்களுக்காக உயிர் விடும் விவசாயிகளுக்காகவும் அவர்களுடைய குரல் ஒலிக்கத் தவறவில்லை. மண்ணைக் காப்பது தொடங்கி அத்தனை பேரும் சர்வதேச அரசியலை எல்லாம் அவ்வளவு எளிமையாக உரையாடினர். இங்கேயும் ஒரு சாமனியன் வளர்க்கும் காளை பின்னணிதான் கதை'' என்றார்.