மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு, காதல் என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களை கடந்த சினிமா எங்கேயும் இல்லை. எதார்த்தங்களில் இருந்து இந்தக் கதையைப் பிரிக்கவே முடியாது. ஒரு வாழ்வின் மணமும் குணமும் நிரம்பியிருந்தால், அதுதான் உலகத் தரம்.'' சினிமாக்களின் அடிப்படையை அளந்து பேசுகிறார் இயக்குநர் கே. ரங்கராஜ். "உதய கீதம்", "நினைவே ஒரு சங்கீதம்", "உன்னை நான் சந்தித்தேன்' என ஒரு காலத்தில் சில்வர் ஜூப்ளி படங்களை தந்தவர். நீண்ட இடைவெளிக்குப் பின் "கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' படத்தை இயக்குகிறார்.

தலைப்பின் வழியா எதுவும் சொல்ல வர்றீங்களா...

கதையின் மனசாட்சியை ஒரு தலைப்பு பிரதிபலிக்க வேண்டும். அதற்காகத்தான் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் என்று இப்படியொரு தலைப்பு. காந்தியும் ஹிட்லரும் ஒரே வீட்டில் இருந்தால் எப்படியிருக்கும். அப்படி எழுகிற ஒரு சூழலை கடக்கிற சில மனிதர்களின் கதைதான் இது. சந்தோஷத்தை எதிர் கொள்கிற அதே நேரத்தில், உண்மையைப் பார்த்தால் மனுஷக்கு அவ்வளவு பயம். இதுதான் வாழ்வின் பெரும் சவால். சந்தோஷத்தை அடைவதற்காக ஒரு பொய் சொல்கிறோம். அது அந்த நேரத்தில் அழகாக இருக்கும். கீரிடமாக ஜொலிக்கும். ஆனால், உண்மை அம்மணமாக நிற்கும். ஒரு கட்டத்தில் ஏசுநாதர் தலையில் இருந்த முள் கீரிடம் மாதிரி குத்தும். அதனால்தான் உண்மையை கண்டு ஓடி ஒளிகிறோம். சந்தோஷம் மட்டுமே கண்ணுக்கு தெரிய, பொய் துரத்த... உண்மை நெருக்க... பலர் சாமியாராக திரிகிறார்கள். சிலர் பைத்தியமாகிறார்கள். என்னை கேட்டால் உண்மையை நேருக்கு நேர் சந்திக்கிற தைரியம்தான் வாழ்க்கை. அது வலிக்கும். உசுரை எடுக்கும். ஆனால், அதுதான் சரி. இப்படி ஒரு அனுபவம் இங்கே சிலருக்கு கைக் கூடி வருகிறது. அதை ஐந்து கோணங்களின் வழியே கடத்தியிருக்கிறேன்.

உள்ளடக்கம் பற்றி பேசினால் இன்னும் கொஞ்சம் தெளிவு பிறக்கும்...

பிரசவம் பார்க்க நாட்டிலியே அதிக வசதி இருக்கிற மருத்துவமனையில் சேர்க்கலாம். ஆனால், தாய் அனுபவிக்கிற அந்த வலிக்கு என்ன பணம் தர முடியும். இருப்பதிலேயே சிறந்த உணவை வாங்கி விடலாம். ஆனால், பசி என்ன விலை கொடுத்தால் வரும். எல்லாவற்றுக்கும் விலை வைக்க ஆரம்பித்ததால்தான் மனிதம் மட்டும் மலிவாகி விட்டது. இதோ மீத்தேன், ஹைட்ரோ ஹார்பன் எடுப்பதற்காக, எத்தனை தமிழ் கிராமங்களில் தூக்கத்தை தொலைத்து போராடினோம். பணம் வாழ்க்கையில் இரண்டாம் பட்சம் ஆகி விட்டால், உலகத்தில் நம் வாழ்க்கையில் பாதி பிரச்னைகள் இல்லாமல் போய் விடும். இன்னும் நிறைய நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள். நல்ல தலைவர்கள், ஆன்மிகவாதிகள், அதிகாரிகள் கிடைப்பார்கள். சரிபாதி குற்றங்கள் தொலைந்து விடும். தேவைக்குத்தான் பணமே தவிர, ஆசைக்கு பணம் இல்லை. பசி, வலி... இந்த இரண்டையும் ஜெயிக்க தெரிந்து விட்டால் வாழ்க்கையை ஜெயித்து விடலாம். வயிற்று பசிக்கு சாப்பிடத்தான், நமக்கு பணம் தேவை. ஆனால், நாக்கு ருசிக்காகச் சாப்பிட ஆரம்பிக்கும் போது, பணத்தின் மீது நமக்கு வெறியாகிறது. இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள்.

நீண்ட நெடிய சினிமா அனுபவம்.... கோடம்பாக்கம் முழுவதும் தெரிந்த முகங்கள்.... அறிந்த விலாசங்கள்... இருந்தும் இடைவெளி ஏன்...

சினிமாக்காரனுக்கு கிளிசரின் போடாமல் கண்ணீர் வழிகிற நிமிடங்கள் இருக்கே... அது ரொம்பவே துயரமானது. ஏனென்றால் அது உண்மையான கண்ணீரா... இல்லை வெறுமென நடிப்பா... என்கிற சந்தேகம் ஒரு விநாடி எல்லாருடைய மனதிலும் எட்டிப் பார்த்து விட்டுப் போகும். வாய்ப்புகள் என்னைத் தேடி வந்ததா... நான் தேடிப் போகவில்லையா... என்பதை இப்போது கணக்குப் போட்டு பார்க்க முடியாது. பெரும் கனவு, லட்சியம் என கோடம்பாக்கத்துக்கு ஓடோடி வந்த நாள்கள் நினைவில் நிழலாடுகின்றன. கனவு தேடி அலைந்த எல்லா இடங்களிலும் வெற்றி, தோல்வியை பார்த்தவன். அப்போது ஒரு உதவி இயக்குநர் தொட்டு விட முடியாத மைல் கல் அது. சினிமா தவிர தேடிப் பிடிக்க மனசு இல்லை. குடும்பம், மனைவி, மக்கள் என சமூகச் சூழல்களின் துரத்தல் ஒரு புறம். சிதைந்து விடாத சினிமா கனவு ஒரு புறம். இந்த இரண்டுக்குமான போராட்டங்களை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. அதை வாழ்ந்துப் பார்த்தால்தான் தெரியும். இத்தனை வருட போராட்டங்களுக்குப் பின் இப்போதுதான் இருக்கை கொடுத்திருக்கிறது காலம். பார்க்கலாம்..... அனுபவங்கள் மூலமாகவே நான் எதையும் புரிந்துக் கொள்ள விரும்புகிறேன். உணர்வுகள், உறவுகள், கனவுகள், இன்பங்கள், துன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கவும் ரசிக்கவும்தானே வாழ்க்கை. என் வாழ்க்கையை நானே வாழ்ந்து பார்க்கும் தருணம் இது.

நடிகர்களின் பங்களிப்பு...

எல்லோருக்கும் நல்ல மனசு உண்டு. கதையையும், அதன் தன்மையையும் புரிந்துக் கொண்டு எல்லோருமே துணைக்கு வந்தார்கள். நான் ரொம்பவே மதிக்கிற ஸ்ரீகாந்த், கே.ஆர். விஜயா மாதிரியான நடிகர்களின் பங்கு இங்கே முக்கியமானது. பூஜிதா, நிமி இமானுவேல் என இரு ஹீரோயின்கள். டெல்லி கணேஷ், சச்சு, நளின், பருத்தி வீரன் சுஜாதா... இப்படி கை தேர்ந்த நடிகர்கள் சேர்ந்ததில் மகிழ்ச்சி. நடிகர்கள் போலவே தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கு எனக்கு பெரும் பலம். ஃபிலிம் ரோலில் சினிமா எடுப்பதில் அவ்வளவு திருப்தி உண்டு. இப்போது சினிமா அப்படி இல்லை. நிறைய மாற்றங்கள் வந்து விட்டன. அந்த மாற்றங்களில்என்னை புகுத்திக் கொண்டு வேலை பார்த்திருக்கிறேன்.லட்சக்கணக்கான மக்களைச் சென்று சேரக் கூடிய சினிமாவுக்கான பொறுப்பை உணர்ந்து உழைத்திருக்கிறேன். எல்லாம் ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com