உலகில் வேறெந்த உறவுகளுக்கும் இல்லாத முக்கியத்துவம் நட்புக்கு உண்டு. யாரிடம் வேண்டுமானாலும் நட்பு வைத்து கொள்ளலாம். நட்பு கொள்வதற்கு எல்லைகளோ, உறவுமுறைகளோ, ஏன் நேரில் சந்தித்துதான் தீர வேண்டும் என்ற அவசியமோ கூட இல்லை.
நண்பர்களை அதிகமாகப் பெறுவது அவசியம்தான். ஆனால், நமக்காக நேரம் செலவிடக்கூடிய, நமது இன்பத் துன்பங்களில் உண்மையோடு பங்கெடுத்துக் கொள்ளக்கூடிய நல்ல நண்பர்களைப் பெறுவது அதைவிட முக்கியம்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
நண்பர்களிடையே உள்ள நல்ல விஷயங்களை கவனித்தல்: நண்பர்களுடன் பழகும் போது அவர்களுடைய நல்லது, கெட்டது அனைத்தும் நமக்குத் தெரியவரும். நல்ல குணங்களை, நல்ல செயல்களை அங்கீகரித்து பாராட்ட வேண்டும். புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. சில வேளைகளில் நண்பர்களிடம் சோர்வு ஏற்படும்போது, நம்முடைய பாராட்டுதல்களும் அவர்களின் தன்னம்பிக்கைக்கு உரமிடும்.
புன்னகை: பழகும் தன்மையில் முகபாவம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் யாரிடம் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதோ அல்லது எப்படித் தொடர்பு கொள்கிறோம் என்பதோ முக்கியமல்ல. நமது முகத்தில் எப்போதும் புன்னகையைத் தவழ விட்டால், அதுவே நம்மை நோக்கி மற்றவர்களை இழுக்கும்.
சந்தேகம் அகற்றல்: நண்பர்கள் கூறும் அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவசியமல்ல. அதேசமயம் அவர்கள் பேசும்போது அதில் நம்பிக்கையில்லாததை வெளிப்படுத்தக் கூடாது. அது உங்களைப் பற்றிய எதிர்மறை கருத்தையே வளர்க்கும்.
அதேபோல், மகிழ்ச்சி என்ற பெயரில் நண்பர்களின் மனம் புண்படும்படி நடந்து கொள்ளக் கூடாது. அது, நண்பர்கள் நம்மை விட்டு விலகவே வழிவகுக்கும்.
நேர்மறையாகப் பேசுதல்: நண்பர்களுக்கு மத்தியில் நடைபெறும் தங்குதடையற்ற உரையாடல்களே, நட்பை வலுப்படுத்தும். அந்தப் பேச்சுகளில் எதிர்மறை விஷயங்களும் வெளிப்படக்கூடும். அதேநேரத்தில், நேர்மறை விஷயங்களுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எதிர்மறை விஷயங்களை அதிகம் பேசினால், நண்பர்களிடத்தில் நம்மை பற்றிய எதிர்மறை எண்ணங்களே தேங்கிவிடும்.
நண்பர்களுக்கு உதவுதல்: நண்பர்களிடம் செலவிடும் நேரத்தை விட, அவர்களுக்கு உதவுவதற்காகச் செலவிடும் நேரமே நண்பர்கள் மத்தியில் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தும். அது அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் பொருட்டும் இருக்கலாம் துயரம் வரும் நேரத்தில் ஆறுதல் கூறுவதாகவும் இருக்கலாம். ""உனக்கு நான் என்ன செய்ய வேண்டும் நண்பனே?‘' என்ற வார்த்தையில், நட்பின் வலிமை ஆழமாக அடங்கியிருக்கிறது.