இணைய வெளியினிலே...

மனிதர் என்னென்னவோ விதங்களில் தம்மை அழித்துக் கொள்ள பெருமுயற்சி செய்கிறார்கள்.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து...

• அனுபவங்களின் பயணிப்பில் 
அடியாழம் தொடுகிறபோது 
தென்படுகிறது... 
ஞானத்தின் தோற்றுவாய்.

- டி.குலசேகர்

* வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்...
கண்கள் இல்லாமல் ரசித்தேன்...
காற்றே இல்லாமல் சுவாசித்தேன்...
கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்...
என் தாயின் கருவறையில் மட்டும். 

- காலன் துரை

* போய்த் தொலைந்த ஆண்டு 
வரப்போகும் ஆண்டு 
எல்லா ஆண்டுகளுமே கற்றுக் கொடுப்பது ஒன்றேதான்.
அன்பைக் கொடு தாராளமாக. 
பதிலாக உனக்குக் கிடைக்கப்போவது 
முட்கள் நிரம்பிய கள்ளி.
இருந்தாலும் கொடுத்து ரத்தம் கசிவதில் 
ஒரு சுகம் இருப்பதாகத் தெரிகிறதா?
அப்படியானால் கொடு. 

- இந்திரன் ராஜேந்திரன்

* நிலவைப் போல 
எட்டாத தொலைவில்
இயற்கையும் இருந்திருந்தால் ?
மானிடன் அழிக்க முற்பட்டிருக்க
வாய்ப்பு இருந்திருக்காது!

- டிஎல் அருண் மாஸ்

சுட்டுரையிலிருந்து...

* உன்னை ஏளனமாக
பார்ப்பவரைக் கடக்க ...
அதை நினைத்துக்
கவலைப்பட வேண்டிய
அவசியமில்லை... 
சிறு புன்னகை ஒன்றே போதும் ! 

- மணிவண்ணன் குமார்

* ஒருமுறை
தவறுகளைச் செய்து பார்...
அப்பொழுதுதான்
உன்னைச் சுற்றி 
எத்தனை நீதிபதிகள்
உள்ளார்கள்
என்பதை நீ
தெரிந்துகொள்வாய். 

- சிவா ஸ்வாமி.பி

* வாழை இலைகள் வாழட்டும் !
பிளாஸ்டிக் பைகள் சாகட்டும் !

- பழைய சோறு

* நிம்மதியைத் தொலைக்க 
இப்போதெல்லாம் appகளே 
போதும்!

- வழிகாட்டி

* முன் கூட்டியே தயார் நிலையில் இல்லாத போர்ப்படைகள்,
தோல்வியை சந்திப்பது போல, 
நம்மை தயார்ப்படுத்திக் கொள்ளாத எதிலும் 
நாம் தோல்வியையே அடைகிறோம்.

- இராதாகிருஷ்ணன்

வலைதளத்திலிருந்து...

மனிதர் என்னென்னவோ விதங்களில் தம்மை அழித்துக் கொள்ள பெருமுயற்சி செய்கிறார்கள். கடந்த சில பத்தாண்டுகளில் இந்த முயற்சி முன்னெப்போதையும் விட வேகமெடுத்திருக்கிறது. ஒரு காரணம் மனிதர் பெட்ரோ- கெமிகல் பொருட்களை நம்பி வாழ்வு நடத்துவது.
பெட்ரோல்/ டீசல் / எரி வாயு போன்றனவற்றை மட்டும் இங்கு சொல்லவில்லை. பெட்ரோலியத்திலிருந்து கிட்டும் இன்னொரு பொருள் ப்ளாஸ்டிக். நிறையப் பேருக்கு ப்ளாஸ்டிக் என்பது எங்கிருந்து கிட்டுகிறது என்பதே தெரியாது. செடிகளில் விளைகிறது என்று சொன்னால் நம்பக் கூட நம்புவார்கள். அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. 
ஆனால் இங்கு சொல்ல வந்ததோ அழிவைப் பற்றி இல்லையா? ப்ளாஸ்டிக்குகளில் மைக்ரோப்ளாஸ்டிக் என்ற ஒரு பொருள் மனித அழிவைத் துரிதப்படுத்த வந்திருக்கிறது.
முகப்பூச்சு, பற்பசை போன்ற ஒப்பனை/ பராமரிப்புப் பொருட்களில் இந்த மைக்ரோப்ளாஸ்டிக் உருண்டைகளைச் சேர்ப்பதை ஒரு வழக்கமாக தொழிற்துறை ஆக்கி இருந்தது. இவை பாலிப்ரொபைலீன், பாலிமெதைல் மெதக்ரைலேட் போன்ற பலவகை ப்ளாஸ்டிக் மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டிருந்தன.
இவை நாம் முகம் கழுவும்போதோ, வாய் கொப்பளிக்கும் போதோ கழிவு நீரில் கலந்து அங்கிருந்து ஏரிகள், ஆறுகள், கடல் ஆகியவற்றில் கலக்கின்றன.
அங்கு இவை மீன்களின் உணவோடு கலக்கின்றன. அந்த மீன்களை மனிதர் உண்ணும்போது மனிதரின் உணவுச் சுழற்சியில் இவை ஒரு பங்காகின்றன. இறுதியில் மனிதக் குடலிலேயே இவை சேர்கின்றன. 

https://solvanam.blog

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com