பிறக்கும்போதே எல்லாருக்குமே எல்லாமுமே தெரிவதில்லை. வயது ஆக ஆக குடும்பப் பாரம்பரியத்தைப் பொருத்தோ அல்லது அக்குழந்தையின் தனிப்பட்ட ஈடுபாட்டாலோ சில கலைகள் மேல் ஆசை வரலாம். பெற்றவர்களோ அவர்கள் எதில் ஈடுபாடு கொண்டு இருக்கிறார்கள் என்பதை மிக கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, பாடுவது, ஆடுவது, நடப்பது, விளையாடுவது எனப் பலவிதமாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். நன்றாகப் பாடக்கூடிய குரல் வளம் இருந்தால் நல்ல இசை ஆசிரியரிடம் பயிற்சிப் பெற ஏற்பாடு செய்யலாம். விளையாட்டுகளில் பல உண்டு. கிரிக்கெட், புட்பால், டென்னிஸ், பேட் மிட்டன், கேரம் போர்டு இப்படி எழுதிக் கொண்டே போகலாம். உடல் வலுவாக உள்ளவர்களுக்குத் தகுந்த மாதிரி பிடித்த விளையாட்டுகளில் பயிற்சி பெற தகுந்த நபரிடம் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யலாம். இதே மாதிரிதான் நடனம், ஓவியம் போன்றவற்றில் விருப்பமிருந்தாலும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். சிறுவயதிலிருந்தே பயிற்சியளித்தால் பிற்காலத்தில் பெரிய விற்பன்னர்களாக வரலாமே!
இதில் வருத்தப்பட வேண்டிய விஷயங்களுக்கும் உள்ளன. பலருக்கு விளையாட்டுகளில் அபாரமான திறமையிருக்கும். ஆனால், அதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியாதபடி வறுமையில் வாடக்கூடிய குடும்பத்தில் பிறந்திருக்கலாம். உடல் வலிமைமை அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்து உணவுகளை வாங்க வசதி இல்லாமல் இருக்கலாம். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் திறமையிருந்தும் நான் மேலே குறிப்பிட்ட பல காரணங்களால் அவர்கள் ஆசைப்பட்ட துறைகளில் பிரகாசிக்க முடியாமல் பலர் தடுமாறுகிறார்கள் என்று நாளிதழ்களில் படிக்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. அரசாங்கத்திலோ, தனியார் நிறுவனங்களிலோ அல்லது சமூக ஆர்வலர்கள் இடத்திலோ சம்பந்தபட்ட நபரின் திறமைகளையும் ஈடுபாடுகளையும் எடுத்துச் சொல்லி, அவர்கள் முன்னேற முயற்சிக்க வேண்டும்...
ஊக்கம் என்பது டானிக் மாதிரி. திறமைசாலிகளைக் கண்டறிந்து முன்னேற உதவுகள்.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ' நூலிலிருந்து...