பிள்ளைகளுக்கு எது தேவை, எது தேவையில்லை என்றெல்லாம் பெற்றோர் எண்ணுவதே கிடையாது. கடைக்குச் சென்று ஒன்றுக்குப் பத்தாக அள்ளிப் போட்டு பொருட்களின் அருமை தெரியாமல் வளர்க்கும் நிலையே இன்றைக்குக் காணப்படுகிறது.
எந்த வயதில் எந்த ஆடையை நம் பிள்ளைகள் உடுத்த வேண்டும் என்பதைப் பெற்றோர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இன்றைக்குப் பிள்ளைகளே அவர்களுக்குரிய விருப்பமான பொருட்களை, ஆடைகளைத் தேர்வு செய்து வாங்கிக் கொள்கிறார்கள். பெற்றோர்கள் அவர்களைக் கவனிப்பதோ, தடுப்பதோ, மறுப்பதோ இல்லை.
பெண் பிள்ளைகளைப் பொருத்தவரை பெற்றோரிடமுள்ள இத்தகைய பொறுப்பற்ற தன்மையாலேயே பெண்களுக்கு எதிரான சமூகக்குற்றங்கள் நாளுக்குநாள் பெருகி வருகின்றன. வாழ்க்கையில் கஷ்டம் என்றால் என்ன? தோல்வி என்றால் என்ன? பாதுகாப்பு என்றால் என்ன? என்பதையெல்லாம் அறியாமல் பிள்ளைகள் வளர்கிறார்கள்.
இத்தகைய பிள்ளைகளே பிற்காலத்தில் பொறுப்பற்றவர்களாக, பெற்றோர்களை மதிக்காமல் போய்விடுகிறார்கள். பிள்ளைகள் வாய் பேசுகிறார்கள், ஒழுங்கீனமாக இருக்கிறார்கள் என்று குற்றப்படுத்துவதில் எவ்விதப் பயனும் இல்லை. குற்றவாளிகள் பிள்ளைகள் அல்ல. அவர்களைக் கவனிக்காத, கண்டிக்காத, பொறுப்பெடுக்காத பெற்றோர்களே முதல் குற்றவாளிகள்.
இந்த உலகத்தில் தரமான கல்வி, நல்ல அறிவு, தன்னைத்தானே அறிந்து உணர்ந்து தெளிகின்ற திறன், தன் வாழ்க்கையைச் சுயமாகத் தீர்மானிக்கும் தகுதியுடைய, உலகம் தெரிந்த பிள்ளைகளைப் பெற்றோர்கள் வளர்க்க வேண்டும்.