அலைபேசி மட்டுமல்ல, உலகில் உள்ள எந்தப் பொருளுமே நன்மை, தீமைகளின் கலவைதான். இன்று அலைபேசி, உடல் மற்றும் மனத்தளவிலான தாக்கத்தை நம்முள் ஏற்படுத்தி உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. இதனால் ஏற்படும் "தலைவலி' பற்றி இப்போது பார்ப்போம்.
முதலில் உடல் அளவிலான பாதிப்புகளைக் காண்போம்:
தலைவலி, கழுத்துவலி, தலைசுற்றல், காது சூடேறுதல், தூக்கமின்மை, நினைவாற்றலில் குறைபாடு, கவனித்துச் செயல்படுவதில் ஏற்படும் குறைபாடு, காதிலிருந்து மூளைக்குத் தகவல்களை எடுத்துச் செல்லும் எட்டாவது கிரேனியல் நரம்பில் ஏற்படும் கட்டி ஆகியவை.
அடுத்து மனத்தளவிலான பாதிப்புகளைப் பற்றிப் பார்ப்போம்:
குடும்பத்தின் மகிழ்ச்சி என்பது குழந்தைகளின் வெகுளித்தனத்தினாலும், விளையாட்டுத்தனத்தினாலும்தான். கைக்குள் அடங்கும் அலைபேசி குழந்தைகளின் மனத்தை மட்டுமல்ல, பெரியவர்களின் மனத்தையும் மாற்றிவிட்டது என்பதை அனைவரும் உணர்ந்திருப்பர் என்றே நம்புகிறேன். உடல் பாதிப்பை விட, பல ஆயிரம் மடங்கு தீயதை விளைவிக்கக் கூடியது இந்த எண்ணங்களின் கலப்படம். இதனால் ஏற்படும் பாதிப்பு தனிமனிதனுக்கு ஏற்படும் தலைவலி மட்டுமல்ல, இந்தச் சமுதாயத்திற்கே ஏற்படும் தலைவலி.
தனிமனிதனின் தலைவலியைச் சிகிச்சை கொடுத்துச் சீர் செய்துவிடலாம். ஆனால் அலைபேசியினால் உருவான சமுதாயத் தலைவலியை என்ன செய்வது? பெற்றோர்கள், கல்விநிறுவனங்கள், அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டுத்தான் மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.
அ.வேணி எழுதிய
"தலைவலியே உன் முகவரிதான் என்ன?'
என்ற நூலிலிருந்து...