வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் தகவல்கள் பாதுகாப்பானதாக இல்லை என்ற பிரச்னைதான் அந்த நிறுவனத்தை ஆட்டிப் படைத்து வருகிறது. உங்கள் தகவல்கள் வேறு யாருக்கும் பகிரப்படாது என பலமுறை வாட்ஸ்அப் தெரிவித்தாலும் பயனாளர்கள் அதை நம்ப மறுக்கிறார்கள்.
இது வாட்ஸ்அப்புக்கு பெரும் சட்டச் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களையும் வாட்ஸ்அப் இழந்து வருகிறது.
எனினும், புதிய கொள்கை முடிவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுவருகிறது. மேலும் வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் பணிகளையும் வாட்ஸ்அப் தீவிரப்படுத்தி வருகிறது.
பொதுவாக வாட்ஸ்அப்பிற்கு வரும் தகவல்கள் நமது அனுமதிக்கேற்ப கூகுள் டிரைவில் சேமிக்கப்படும். இந்தத் தகவல்கள் கிளவ்டு சேமிப்பில் பாதுகாப்பாக இருக்காது என்று தகவல்கள் பரவியதால் அதற்கும் கடவுச் சொல் பாதுகாப்பு அளிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் உங்கள் சாட் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் வேறு யாரும் ஊடுருவி பார்க்க முடியாது என்றும் வாட்ஸ்அப் கூறுகிறது.
எனினும், பதிவுச் செய்யப்பட்ட கடவுச் சொல்லை மறந்துவிட்டால் சேமிக்கப்பட்ட தகவல்களைத் திரும்பப் பெற இயலாது என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
இந்த கடவுச் சொல் சேவை விரைவில் அமலுக்கு வர உள்ளது.
இதேபோல், தற்போது வாட்ஸ்அப் தகவல்கள் 7 நாள்களில் தானாக அழியும்
சேவை உள்ளது. 24 மணி நேரத்தில் தகவல்கள் தானாக அழியும் சேவையையும்
தொடங்க வாட்ஸ்அப் திட்டமிட்டு வருகிறது.
வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ள இதுபோன்ற புதிய சேவைகள் மக்களின் நம்பிக்கையைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.