பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களைத் தடுக்க சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதே ஒரே வழியாக உள்ளது. உலகமே இதற்காக ஆக்கபூர்வமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு மாசைத் தடுத்தால் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பதால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் இயங்கும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையைக் குறைக்க உலக நாடுகள் முயன்று வருகின்றன.
இதன் முதல்கட்டமாக கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க மின்சாரக் கார்கள், இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவித்து சாலைப் போக்குவரத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.
அடுத்ததாக விமானப் போக்குவரத்தில் இந்த மாற்றங்களைக் கொண்டு வரும் ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் முதல்கட்டமாக சூரிய மின்சாரத்தின் மூலம் இயங்கும் விமானம் சோதனை முறையில் வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், கார் முழுவதும் அதிக எடை கொண்ட மின்சேமிப்பு பேட்டரிகளை அடக்கி வைத்து காரை இயக்கினாலும் அதிகபட்சமாக தொடர்ந்து 600 கி.மீ. தூரத்துக்குதான் தற்போதைக்கு இயக்கப்படுகிறது.
இந்நிலையில், விமானத்தில் பேட்டரிகளை வைத்து அதன் மூலம் ஒருவர் பயணம் செய்யும் மின் விமானத்தை 15 நிமிஷங்கள் இயக்கி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
சுமார் 600 செல்-பேட்டரி பேக்குகளை அடைத்து வைத்து அதன் மூலம் 500 ஹார்ஸ் உந்து சக்தியை அளிக்கும் மூன்று மோட்டார்களை இயக்கி இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளது. மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் மின் விமானத்தை இயக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
மேலும், மின் விமானத்தை பயணிகள், சரக்கு போக்குவரத்துக்குப் பயன்படுத்தவதும் எதிர்காலத் திட்டமாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வைத்துள்ளது. இதற்கான சோதனை புள்ளி விவரங்களைச் சேகரிக்க உருவாக்கப்பட்ட இந்த முதல் மின் விமானத்தில் வெற்றியும் கண்டுள்ளது.