2022-ஆம் ஆண்டுக்கான விண்வெளித் திட்டங்கள் ஆண்டு தொடக்கத்திலேயே வேகமெடுத்துள்ளன.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உருவாக்கியுள்ள உலகின் மிகப்பெரிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, பூமியிலிருந்து 15. கி.மீ. தொலைவு சென்று அதன் சுற்றுவட்டப் பாதையை ஜன. 25-ஆம் தேதி அடைந்தது.
ரபஞ்சத்தின் ஆரம்பகால நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ள இந்தத் தொலைநோக்கி பல ரகசியங்களுக்கு விடை காணும் என விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
ஜேம்ஸ் வெப் வரிசையில் தொடரவுள்ள நிகழாண்டின் முக்கிய விண்வெளித் திட்டங்கள் குறித்து பார்ப்போம்.
மனிதர்கள் நிலவுக்குச் சென்று திரும்புவதன் முன்னோடியாக ஓரியன் விண்கலத்தை பிப்ரவரியில் செலுத்தவுள்ளது நாசா. இந்த ஆளில்லா விண்கலம் நிலவைச் சுற்றிவிட்டு பூமிக்குத் திரும்பும். இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் அடுத்து மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ஆர்ட்டெமிஸ் திட்டத்தை நாசா தீவிரப்படுத்தும்.
அடுத்ததாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) சுற்றுலாவாக ஒரு விண்கலத்தை பிப். 28-ஆம் தேதி அனுப்பவுள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். 4 சுற்றுலாப் பயணிகள் இந்த விண்கலம் மூலம் சென்று ஐஎஸ்எஸ்ஸில் 8 நாள்கள் தங்கியிருப்பார்கள். அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதளத்திலிருந்து இந்த விண்கலத்தை ஏற்றிக்கொண்டு பறக்கவுள்ளது ஃபால்கன் ராக்கெட்.
ஜூன் மாதம் வியாழன் கிரகத்துக்கு "தி ஜூஸ்' விண்கலத்தை அனுப்பவுள்ளது நாசா. அறிவியல் உபகரணங்கள் நிரம்பிய இந்த விண்கலம், வியாழனில் உயிர்கள் வாழத் தேவையான சூழ்நிலைகள் எவை என்பது குறித்து ஆராயும்.
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் "லூனா 25' என்ற விண்கலத்தை ஜூலை மாதம் அனுப்பவுள்ளது ரஷியா. எதிர்காலத் திட்டங்களுக்கு வழிவகுக்கும் பல்வேறு தொழில்நுட்பச் சோதனைகளை இந்த விண்கலம் மேற்கொள்ளும்.
ஆகஸ்டில் சைகி என்ற சிறுகோளை நோக்கி அதே பெயரிலான விண்கலத்தைச் செலுத்தவுள்ளது நாசா. செவ்வாய் மற்றும் வியாழனுக்கு இடைப்பட்ட சிறுகோள் தடத்தில் உள்ள 10 பெரும் சிறுகோள்களில் இதுவும் ஒன்று. ஆனால், இந்த விண்கலம் அச்சிறுகோளின் சுற்றுப்பாதையில் 2026-இல் தான் நுழையும்.
அக்டோபரில் "டார்ட்' விண்கலத்தைச் செலுத்துகிறது நாசா. பூமியின் மீது மோதுவதுபோல் வரும் சிறுகோள்கள், விண்கற்களின் மீது மோதி அதை திசைதிருப்புவது தொடர்பான சோதனைக்காக இந்த விண்கலம் அனுப்பப்படுகிறது.