மனிதர்களின் பணிகளை களைப்படையாமல், வியர்க்காமல் விறுவிறுப்பாகச் செய்து முடிக்க உதவும் ரோபோக்கள், பேரிடர் காலங்களில் ஆபத்தான செயல்களிலும் பயன்படுகின்றன.
அதுவும் கரோனா தொற்று பரவலைக் கண்டு உலகமே அஞ்சியபோது, கரோனா தொற்று நோயாளிகளின் சேவைகளுக்கு ரோபோக்கள்தான் பெரிதும் உதவின.
இதனைத் தொடர்ந்து உலக அளவில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ரோபோக்களின் அடுத்த கட்ட பயன்பாட்டுக்கான ஆராய்ச்சிகளில் முதலீடுகளைச் செய்ய பல முன்னணி நிறுவனங்கள் தொடங்கிவிட்டன.
ரோபோ தயாரிப்பில் முன்னணி நாடாக உள்ள ஜப்பானில் அண்மையில் நடைபெற்ற உலகின் மிகப் பெரிய ரோபோ கண்காட்சியில் இடம் பெற்ற ரோபோக்கள் இதற்கு முன்னோட்டமாக அமைந்தன.
இதில் குதிரை வடிவில் வடிவமைக்கப்பட்டிருந்த ரோபோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. குதிரை போல் கீழே அமர்ந்து ஆட்களை ஏற்றிக் கொண்டு நடந்து செல்லும் இந்த போரோவுக்கு "பெக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
கால்களை மடக்கி வாகனத்தைப்போலும் இதனை இயக்கலாம். 220 பவுண்ட் எடையை இது சுமந்து செல்லும். இதனை கவாசாக்கி நிறுவனம் உருவாக்கி உள்ளது.
இதேபோல் ஹுமனாய்டு ரோபோ அனைவரின் கவனத்தை கவர்ந்தது. மனிதர்களின் செயல்பாடுகளைப் போலவே இந்த ரோபோக்களின் அசைவுகளும், மனிதர்களைப் பின்பற்றி செயல்படும் திறனும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களுக்கு ஏற்பட்டுள்ள தேவையைப் போல் தொழிற்சாலைகள் உள்பட பல்வேறு துறைகளில் வரும் காலங்களில் இதுபோன்ற ரோபோக்களின் தேவை உலக அளவில் அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆகையால், ரோபோ நண்பர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழ்நிலை எல்லா இடங்களிலும் வெகு விரைவில் ஏற்படும் என்றே கூறலாம்.