சமையலறையில் கவனிக்க வேண்டியவை:
* சமையலறையில் கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ளதா? வெள்ளைப் பூண்டை நன்றாக நசுக்கி சமையலறை முழுவதும் ஆங்காங்கே போட்டு விடுங்கள். கரப்பான் வரவே வராது.
* சமையலறை சுவர் ஓரங்களில் சிறுசிறு துண்டுகளாக வெங்காயத்தை நறுக்கிப் போட்டு வைத்தால் விஷப் பூச்சிகள் வராது.
* சமையலறையில் பயன்படுத்தும் டப்பாக்களில் கறைகள் இருந்தால் அவற்றை உப்பு கலந்த தண்ணீரினால் கழுவ வேண்டும். கறைகள் மறைந்துவிடும்.
* சமையலறையில் உள்ள பொருள்களை அவ்வப்போது சுத்தமாக துடைத்து வையுங்கள்.
* சமையலறையில் கழிவு நீர்த் தொட்டியில் நாற்றமா? கற்பூரத்தை போட்டு வையுங்கள்; நாற்றம் வராது.
* சமையலறையில் இரும்புத் துருவின் கறை ஏற்பட்டால் உடனே எலுமிச்சைச் சாற்றையும் உப்பையும் போட்டுத் தேய்த்துத் துணியால் துடைத்து விடுங்கள். கறை இருந்த சுவடே தெரியாது.
* சமையலறையில் எறும்புகள் வராதிருக்க கொஞ்சம் விநிகரை தண்ணீரில் கலந்து துடைத்துவிடுங்கள்.
எறும்புகள் வரவே வராது.
- ஆர். ஜெயலட்சுமி
ஃபிரிட்ஜ் பராமரிப்பு:
* கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை ட்ரேயில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் மிக விரைவில் ஐஸ் கட்டியாக மாறும்.
* ஃபிரிட்ஜில் வாடை வராமல் இருக்க எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி உள்ளே வைக்க வேண்டும்.
* பழச்சாறு எடுத்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து ஃபிரிட்ஜ் உள்ளே வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாது.
* வெண்ணெய், பால்கட்டி போன்ற பால் உணவுப் பொருள்களை குளிர்சாதனப் பெட்டியில் ஃபிரீஸரில்தான் வைக்க வேண்டும். அப்படி வைத்தால்தான் அதிலுள்ள சத்துக் குறையாமல் இருக்கும்.
* ஃ பிரீஸரில் வைக்கும் ஐஸ் தட்டின் அடியில் சிறிதளவு எண்ணெய்யைத் தடவி பின்னர் வைத்தால் ஒட்டிக் கொள்ளாமல் எளிதில் எடுக்கலாம்.
* கத்திரிக்காயை எப்போதும் காகிதப் பையில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.
* குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்தவுடன் எலுமிச்சம் பழங்களை பிழியாதீர்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்து தரையில் நன்கு தேய்த்த பின்னர் சாறு எடுத்தால் சாறு நிறைய வரும்.
* பழங்களை அப்படியே ஃபிரிட்ஜுக்குள் அடுக்கி வைக்காமல் ஒரு பிளாஸ்டிக் உறையிலோ அல்லது டப்பாவிலோ போட்டு வைக்கலாம். பழங்கள் சுருங்கிப் போகாது.
* காற்றுப் புகாத கன்டெய்னரில் வைத்துவிட்டால் பச்சைமிளகாய் நிறம் மாறாது.
* ரொட்டிகளை வைக்கும் டப்பாக்களை வாரம் ஒரு முறையாவது நன்கு கழுவி காய வைத்து பின்னர் ரொட்டி சுற்றி வந்த கவரோடு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டால் ரொட்டி நீண்ட நாட்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
* வெண்டை, அவரை, பட்டாணி போன்றவை நீண்ட நாட்களுக்குப் பசுமை மாறாமல் இருக்க வேண்டுமானால் ரெஃப்ரிஜிரேட்டரில் பிளாஸ்டிக்கில் போட்டு வைப்பதற்கு பதில் பழுப்பு நிற அட்டையில் சுற்றி வைத்தாலே போதும் காய்கறி ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
* இஞ்சி, பூண்டை விழுதை மொத்தமாக அரைத்து ஃபிரிட்ஜுக்குள் வைத்துக் கொண்டால் நீண்ட நாட்களுக்கு வரும்.
- ஆர். மீனாட்சி