கர்நாடக மாநிலத்தில் முதன்முதலாக திருநங்கையின் திருமணம் ஒன்று சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கைகளின் உரிமைகளுக்காகப் போராடி வருபவர் திருநங்கை அக்கை பத்மசாலி. இவர் சமூக செயற்பாட்டாளரும், நெருங்கிய நண்பருமான வாசுதேவைத் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஜனவரி 20-ஆம் தேதி சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் நடைபெற்றது.
""இதற்காக நாங்கள் சுமார் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. திருமணப் பதிவுக்கு தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்து கொண்டோம். 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பித்த நிலையில், 30 நாள்களுக்குப் பிறகு திருமணம் செய்துகொண்டோம். இது திருநங்கைகள் வாழ்வில் மிகப்பெரிய விஷயம். திருநங்கைகளின் திருமணத்துக்காக அரசு திட்டங்களை ஒதுக்க வேண்டும் என்பதே எங்கள் இருவரின் கோரிக்கை'' என்கிறார் அக்கை பத்மசாலி.