தட்டு எறிவதில் பதக்கங்கள் குவித்திருக்கும் கிருஷ்ணா பூனியா இன்னொரு புதிய திசையில் ஜம்மென்று பயணிக்கப் போகிறார். விளையாட்டு வீராங்கனையாக அல்ல.... சட்டசபை உறுப்பினராக!
களம் மாற்றி காலடி எடுத்து வைத்திருக்கும் பூனியா நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் இந்த தங்க மகள்.
பூனியாவிற்கு முப்பத்தாறு வயதாகிறது. 2013-இல் நடந்த ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் பூனியா.
தட்டு எறிதலில் ஒவ்வொரு முறையும் தனது திறமையை பூரணமாக வெளிக்காட்டி, தனது சாதனைகளை மேம்படுத்தி வெண்கலப் பதக்கத்திலிருந்து தொடங்கி தங்கப் பதக்கங்கள் பெற்றவர். அது போலவே சென்ற தேர்தலில் கிடைத்த தோல்வியை இப்போது வெற்றியாக மாற்றிக் காண்பித்துள்ளார்.
பூனியா ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும், 2000-இல் தனக்கு பயிற்சியாளராக இருந்த விளையாட்டு வீரர் வீரேந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டதால் ராஜஸ்தான் வாசியானார். பூனியா போட்டியிட்டது காங்கிரஸ் கட்சியின் சார்பில்..!
- அங்கவை