கோடை காலம் கொளுத்தும் வெயிலுடன் தொடங்கி விட்டது. இக்காலத்தில் பெரும்பாலானவர்கள் வியர்வை நாற்றத்தில் அவஸ்தைபடுவார்கள். இது அதிக சந்தோஷம், துக்கம், பதற்றம் போன்றவை ஏற்படும் போது உடலில் உள்ள சுரப்பிகள் வேகமாக செயல்பட துவங்குகிறது. இந்த செயல்பாட்டால் நிறமோ, மணமோ இல்லாத திரவங்கள் வெளியே வரும் போது அந்த திரவத்தில் பாக்டீரியாக்களும் அதனுடன் வியர்வையும் சேர்ந்து நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
மேலும் நாம் உணவில் பயன்படுத்தும் கிராம்பு, ஏலக்காய், பட்டை, வெங்காயம், பூண்டு ஆகியவை அதிகம் சேரும் போது உடல் திரவத்தின் நாற்றம் அதிகமாக வெளியேறுகிறது. அப்போது நம்மை சுற்றி இருப்பவர்கள் ஒரு வித அருவெறுப்புடன் பார்க்கும் நிலை ஏற்படுகிறது. இதனை சில எளிய வழிமுறைகளில் எளிதாக விரட்டலாம்:
நார்ச்சத்து அதிகமுள்ள கீரைகள், ஆரஞ்சு, அன்னாசிப் பழங்களை நிறைய சாப்பிட்டு வர இவை திரவ உற்பத்தியை குறைத்து துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கிறது.
நிறைய தண்ணீர் குடிப்பதுடன் தினமும் இரவிலும் பகலிலும் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு உடலில் அதிக வியர்வை சுரக்கும் பகுதிகளில் பவுடர் பூச வேண்டும்.
உடலில் மட்டுமில்லாமல் உடையிலும் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக உள்ளாடைகள் அதிக சுத்தமாக இருக்க வேண்டும். வியர்வை உறிஞ்சும் தன்மை கொண்ட காட்டன் துணி வகைகளை பெரும்பாலும் பயன்படுத்த வேண்டும்.
வழக்கமான சோப்பு வகைகளை தவிர்த்து பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பினை பயன்படுத்துவது நல்லது.
சிலருக்கு உள்ளங்கால் பகுதி அதிகமாக வியர்க்கும். அப்படிப்பட்டவர்கள் காற்று படும்படியான செருப்புகளை அணிவதுடன் இறுக்கமான ஷூக்களை அணிவதை தவிர்க்கலாம். ஷூ அணிய நேர்ந்தால் சாக்ஸ்களை தினமும் துவைத்து அணிவதுடன் பிளாஸ்டிக், ரப்பர் செருப்புகளை அணியக் கூடாது.
கை, கால்களை சுத்தமான நீரில் சோப்பு போட்டு கழுவி துடைத்து விட்டு விரல்களுக்கிடையே நறுமணமுள்ள பவுடர் பூச வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக எப்போதும் மனதை அமைதியாக வைத்திருப்பதுடன் உணர்ச்சிகளை எல்லை மீற விடக் கூடாது.
(அழகு குறிப்புகள் என்ற நூலிலிருந்து)
- நாகை சத்யா பாபு