இருபது ஆண்டுகளாக தடகள வீராங்கனையாக விளங்கிய முன்னாள் வீராங்கனை பி.டி.உஷாவின் வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. "விளையாட்டுத் துறையில் இன்றைய தலைமுறையினரை ஊக்கப்படுத்தும் வகையில் பிரபலமான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் வரலாறு படமாக்கப்படுவது மகிழ்ச்சியான விஷயமாகும். என்னுடைய வாழ்க்கையும் படமாக்கப் போவதாக அறிந்தேன். ரேவதி எஸ். வர்மா இயக்கத்தில் எந்த நடிகை என்னுடைய பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஓட்ட பந்தயத்தில் என்னுடைய ஸ்டைலை பிரதிப்பலிப்பது அவ்வளவு சுலபமல்ல. இதற்காக நான் எடுத்துக் கொண்ட கடினமான பயிற்சியும், முயற்சியும் சாதாரணமானவை அல்ல. ஒலிம்பிக்ஸ், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு என்னுடைய வாழ்க்கை முன்னுதாரணமாக அமையலாம்'' என்கிறார் பி.டி.உஷா