எலுமிச்சை, நன்னாரி ஸ்குவாஷ்
தேவையானவை:
நன்னாரி வேர் - 100 கிராம்
பொடித்த வெல்லம் - கால் கிலோ
எலுமிச்சைச்சாறு - 1 டம்ளர்( 200 மி.லி.)
தண்ணீர் - 600 மி.லி.
செய்முறை: நன்னாரி வேரை சுத்தம் செய்துவிட்டு ஓரளவு இடித்துக் கொள்ளவும். தண்ணீர் 300 மில்லி விட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் அதை மிக்ஸியிலிட்டு ஒரு சுற்று சுற்றி, ஒன்றிரண்டாக அரைத்து வடிகட்டி வைக்கவும். தூள் செய்த வெல்லத்தில் மீதி உள்ள 300 மில்லி தண்ணீரை விட்டு அடுப்பில் வைக்கவும். வெல்லம் நன்கு கரைந்ததும் எடுத்து வடிகட்டி, நன்னாரி வடிகட்டிய நீருடன் விட்டு அடுப்பில் வைக்கவும். நன்கு கொதித்து வரும்போது, அடுப்பை சிம்மில் வைக்கவும். ஓரளவு கொதித்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். ஆறியதும் எலுமிச்சைச்சாறு விட்டு கலந்து வைக்கவும். பாட்டிலில் எடுத்து வைத்து, தேவைப்படும்போது, 1 பங்கு எலுமிச்சம்பழச்சாறு, நன்னாரி ஸ்குவாஷ், 3 பங்கு தண்ணீர் விட்டுக் கலந்து குடித்தால் இந்தக் கோடைக் காலத்தில் தேவாமிர்தமாக இருக்கும்.
ஜிகர்தண்டா
தேவையானவை:
பால் - அரை லிட்டர்
பனங்கற்கண்டு - தேவைக்கேற்ப
சப்ஜா விதை - 2 மேசைக்கரண்டி
ஏதாவது ஒரு ஐஸ்கிரீம் - 1 கரண்டி
செய்முறை: சப்ஜா விதையை 1 டம்ளர் தண்ணீரில் ஊற வைக்கவும். 1லிட்டர் பாலை அடி கனமான ஒரு பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைத்து கால் லிட்டராக ஆகும் வரை சுண்ட காய்ச்சவும். அரை லிட்டர் பாலைத் தனியாக காய்ச்சி வைக்கவும். பின்னர், இரண்டையும் ஆற வைக்கவும். அரை லிட்டர் பாலில், பனங்கற்கண்டைப் போட்டுக் கலக்கி வைக்கவும். பிறகு சப்ஜா விதை ஊறியதைச் சேர்த்துக் கலக்கவும். பரிமாறும்போது மேலாக ஐஸ்கிரீம் ஒரு கரண்டி சேர்த்துப் பரிமாறவும்.
(சப்ஜா விதைக்கு பதில் ஊற வைத்த பாதாம் பிசினையும் சேர்த்துக் கொள்ளலாம்)
ஆரோக்கிய மசாலா மோர்
தேவையானவை:
தயிர் - 1 கிண்ணம், இஞ்சி - சிறு துண்டு
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு, மல்லித்தழை - சிறிது
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை, தண்ணீர் - 3 டம்ளர்
உப்பு - தேவையானவை
செய்முறை: முதலில் இஞ்சி, கறிவேப்பிலை, மல்லித்தழை மூன்றையும் மிக்ஸியிலிட்டு அடித்துக் கொள்ளவும். பின்னர், வடி கட்டி வைக்கவும். பிறகு தயிர், உப்பு, பெருங்காயத்தூளைச் சேர்த்து, ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனுடன் இஞ்சி, மல்லித்தழை வடிகட்டிய தண்ணீர், மேலும் தேவையான தண்ணீர்விட்டுக் கலந்து பரிமாறவும்.
- அம்பிகா சஞ்சீவ், சென்னை.
ஓட்ஸ், கம்பு கூழ்
தேவையானவை:
ஓட்ஸ் - 1 மேசைக்கரண்டி, கம்பு மாவு - 1 மேசைக்கரண்டி
வேக வைத்த பாசிப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
தயிர் - அரை கப், உப்பு - தேவையானவை
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1 கிண்ணம்.
மல்லித்தழை - சிறியது, கேரட் துருவல் - 1 மேசைக்கரண்டி
தண்ணீர் - 2 கப்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீரை விட்டு அடுப்பில் வைக்கவும். ஒரு கொதிவந்ததும் ஓட்ஸ், கம்பு மாவைப் போட்டுக் கிளறவும். பாதி வெந்தவுடன் வெந்த பாசிப்பருப்பைப் போட்டுக் கொதிக்க விடவும். நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும். 10 நிமிடங்கள் கழித்து உப்பு, தயிர் விட்டுக் கலக்கவும். பிறகு கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை போட்டுக் கலந்தால் சுவையான ஓட்ஸ், கம்பு கூழ் ரெடி.