வாசகர்களின் மனநலம் சார்ந்த கேள்விகளுக்குமனோ தத்துவ நிபுணர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் அளித்த பதில்கள்:
என் மனைவிக்கு கடந்த 12 ஆண்டுகளாக பக்கவாதம் பாதித்து இருந்தது. அவருக்கு சேவை செய்து வந்தேன். இன்று அவள் இறந்து ஆறு மாதங்கள் ஆகியும் இரவு அவள் நினைவில் தூக்கம் வருவதில்லை, இது ஏன்?
- சு.ஆறுமுகம், கழுகுமலை.
இந்த நிலையை நாங்கள் "கிரீப் ரியாக்ஷன்' என்று சொல்வோம். அதாவது நீங்கள், பன்னிரண்டு ஆண்டுகளாக வேறு எதிலும் அதிகம் கவனம் செலுத்தாமல், உங்கள் மனைவியை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்துவிட்டு, அவர் இறந்த பின்பு, அடுத்து வாழ்க்கையில் என்ன செய்வது என்ற குழப்பமும், இனி யாருக்காக வாழ்கிறோம் என்ற பிடிப்பில்லா தன்மையும் தான் உங்களது இந்த நிலைக்கு காரணம். பொதுவாக நெருங்கிய உறவுகள் யாராவது திடீரென்று இறக்க நேர்ந்தால், கொஞ்ச நாட்கள் தூங்கமுடியாமல், அவர்கள் நினைவாகவே இருப்பார்கள். இந்த நிலை அதிகநாட்கள் நீடிக்கும்போது, அதை நாங்கள் "பெத்தலாஜிக்கல் கிரீப்' என்று சொல்வோம். உங்களைப் பொருத்தவரை, உங்கள் மனைவி இறந்து 6 மாதங்கள்தான் ஆகின்றன என்பதால் இதனை பெத்தலாஜிகல் கிரீப் என்று சொல்ல முடியாது. இதுவே ஓர் ஆண்டுக்கு மேல் நீடித்தால் அது பெத்தலாஜிகல் கிரீப். இப்போது நீங்கள் கிரீப் ரியாக்ஷனில் இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் இந்த நினைவில் இருந்து மீண்டு, இயல்பாக இருக்க, உங்களுக்கு நன்றாக தூக்கம் வர சில வழிகளை கையாளலாம்.
அதாவது, நீங்கள், எந்த காரணம் கொண்டும் தனிமையாக இருக்கக் கூடாது. எப்போதும், யாராவது உங்கள் பக்கத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து நீங்கள் கட்டாயமாக தினசரி காலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் இரவில் உங்கள் மூளையில் ஒருவகையான மெலட்டோனின் சுரக்கச் செய்யும். இதனால், இரவில் உங்களால் நன்றாக தூங்க முடியும்.
இதைத் தவிர "ஸ்லீப் ஹைஜின்' என்பதை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது, மாலை நேரத்தில் குளித்துவிட்டு, சூடானப் பாலை அருந்திவிட்டு, அமைதியான பாடல்களைக் கேட்டுக் கொண்டிருப்பது, நல்லவைகளை நினைத்துக் கொண்டிருப்பதும் நிச்சயமாக உங்களுக்கு தூக்கத்தை வரவழைக்கும். இதையெல்லாம் செய்தும், மூன்று மாதங்கள் கழித்தும் உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால், உங்களுக்கு சிறிது மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். அப்போது நீங்கள் அருகிலுள்ள மருத்துவரை அணுகி தீர்வு பெறலாம்.
ஆனால், தூக்கம் வரவில்லை என்பதற்காக, தூக்க மாத்திரைகளை உட்கொள்வது போன்றவற்றை செய்யாதீர்கள். பின்னர், நாளடைவில் நீங்கள் அதற்கு அடிமையாகிவிடும் நிலை ஏற்பட்டு விடும். பின்னர், அதுவே உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். எனவே, அது போன்ற தவறுகளை எப்போதும் செய்யாதீர்கள்.
என் வயது 28. எனக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. என் கணவர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தினமும் இரவில் குடித்துவிட்டு வந்து என்னை துன்புறுத்துகிறார். ஆனால், காலையில் போதை தெளிந்தவுடன் என்னிடம் அன்பாக நடந்து கொள்கிறார். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனால், இந்த வாழ்க்கையை விட்டுப்போகவும் முடியாமல், வாழவும் மனமில்லாமல் தவிக்கிறேன். நான் என்ன சொல்லியும் அவரை மாற்றமுடியவில்லை. இதற்கு ஏதேனும் வழி உள்ளதா?
- ஜி.லதா, சென்னை.
தற்போது குடிப்பழக்கத்தை நிறுத்த பல சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. அதில் "டி- அடிக்ஷன்' ப்ரோகிராம் என்று உள்ளது. அந்த முறையில் முதல் 4-5 நாள்களில் குடிப்பழக்கத்திற்கு ஆளானவரின் உடல் ரீதியான பிரச்னைகளை சரி செய்வார்கள். பின்னர், அவருக்கு குடிப்பழக்கத்திலிருந்து வெளிவருவதற்கான கவுன்சிலிங் கொடுப்பார்கள். பின்னர், அவரின் மனைவிக்கும் அவர்களது பிரச்னை சார்ந்த கவுன்சிலிங் கொடுப்பார்கள். இந்த சிகிச்சை முறையை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் கணவர் விரைவில் குணமடைவார். மேலும், தற்போது குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட நிறைய சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.
பொதுவாக நாங்கள் குடிப்பழக்கத்தை, குடிப்பழக்கம் என்று சொல்வதை விட "குடி நோய்' என்றுதான் சொல்கிறோம். ஏனென்றால், நிறையப்பேர் நினைப்பது போன்று குடிப்பது என்பது ஒரு பழக்கம், அதனை நினைத்தால் விட்டுவிடலாம் என்று. ஆனால், ஒரு கட்டத்தை தாண்டி சென்றுவிட்டால் இது ஒரு நோய். இந்த நோய்க்கு சிகிச்சை செய்தால்தான் அதற்கு தீர்வுகாண முடியும்.
சென்னை அடையாரில், ய.ஏ.ந (யஞகமசபஅதவ ஏஉஅகபஏ நஉதயஐஇஉ) என்ற மையம் இருக்கிறது. அதுபோன்று கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை, டி.டிகே என பல நல்ல டி- அடிக்ஷன் மையங்கள் இருக்கின்றன அவற்றில் ஏதேனும் ஒன்றை உங்கள் வசதிக்கு தகுந்தாற்போல் தேர்வு செய்து அதற்கு உங்கள் கணவரை அழைத்துச் செல்லுங்கள். அவர், வர மறுத்தால், முதலில் நீங்கள் அந்த டி- அடிக்ஷன் சென்டருக்குச் சென்று அவரை பற்றி சொல்லி, அவரை எப்படி அழைத்து வருவது என்பதை கேளுங்கள். உங்களுக்கு அவர்கள் நல்ல தீர்வு தருவார்கள். அங்கு அழைத்துச் சென்றால் நிச்சயமாக உங்கள் கணவர் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட்டுவிடுவார். மேலும், அவர் உங்கள் மீது அன்பாகதான் இருக்கிறார் என்று சொல்லியுள்ளீர்கள். எனவே, நிச்சயமாக உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.