சென்னையில் சமீபத்தில், வீகேர் நிறுவனம் சார்பில் சன்ஸ்கிரீன் உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2000-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து கின்னஸ் சாதனை செய்துள்ளனர். இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் இ.கரோலின் பிரபா கூறியதாவது:
"இன்றைய காலகட்டத்தில் பருவ மாற்றங்களால் ஏற்படும் சரும பாதிப்புகளிலிருந்து இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, சரும பராமரிப்பு மற்றும் சன் ஸ்கிரீன் தடவுவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கின்னஸ் சாதனைக்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்தோம்.
அதேசமயம், இதற்கு முன்பு அமெரிக்காவில் 1822 நபர்கள் கலந்து கொண்டு சன் ஸ்கிரீன் பயன்படுத்தி, கின்னஸ் சாதனை செய்துள்ளனர் என்பதனை அறிந்தோம்.
அதனால், நாங்கள் சுமார் 2000 அழகுக் கலை நிபுணர்களை வைத்து கின்னஸ் சாதனை முயற்சி செய்ய வேண்டும் என்ற இலக்கினை வைத்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக 2441 அழகுக் கலை நிபுணர்கள் கலந்து கொண்டு மூன்று நிமிடம் 29.89 நொடிகளில் இந்த கின்னஸ் சாதனைக்கான முயற்சியை வெற்றிகரமாக்கி கொடுத்துள்ளனர். அதே போன்று பியூட்டி டிப்ஸ் குறித்து ஸ்பீச் கொடுத்ததற்காக மேலும் ஒரு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் இரண்டு கின்னஸ் சாதனை விருது பெற்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக எங்களுக்கு "ஆல் இந்தியா ஹேர் மற்றும் ப்யூட்டி அசோசியேஷன்' பெரிதும் உதவினார்கள். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
- ஸ்ரீ