விமானத்தில் ஒருவர் மட்டும் பயணியாக பயணிக்க அந்தப் பயணி வெகு முக்கிய பிரமுகராக இருக்க வேண்டும். அல்லது அந்தப் பயணி விமானத்தை முழு வாடகைக்கு எடுத்து தனியாகப் பயணிக்கலாம். சிக்கன கட்டண பயணச் சீட்டு ஒன்று மட்டும் வாங்கிக்கொண்டு தனி ஒருத்தியாக விமானத்தில் பயணிக்க முடியுமா..?
சாதாரணமாக முடியாது. சில அரிய சந்தர்ப்பங்களில் பயணிகள் யாரும் பதிவுச் சீட்டு எடுக்காத நிலையில், பயணச் சீட்டு எடுத்த ஒருவர் தனியாளாக பயணித்துத்தானே ஆக வேண்டும். இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் அந்த விமான பயண சேவையை விமானத்தின் நிறுவனம் பெரும்பாலும் ரத்து செய்துவிடும்.
சென்ற டிசம்பர் 24 - ஆம் தேதி அன்று தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டானோ தீவிலிருக்கும் டவையோ நகரத்திலிருந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவுக்கு உள்ளூர் விமானம் புறப்படத் தயாரானது. தொலைக்காட்சி நிருபரான லூயிஸா எரிஸ்ப் விமானத்திற்குள் நுழைந்ததும் தூக்கிவாரிப் போட்டது. அவரைத் தவிர பயணிகள் வேறு யாரும் இல்லை. விமானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பைலட் மட்டும் இருந்தார்கள்.
சரி... பயணிகள் இன்னும் வரத் தொடங்கவில்லை... என்று நினைத்த லூயிஸா பல நிமிடங்கள் காத்திருந்தும் ஏமாற்றம்தான் கிடைத்தது. வேறு எந்தப் பயணியும் வரவேயில்லை.
""என்ன இப்படி..'' என்று விமானப் பணியாளர்களிடம் கேட்க...
""இன்று நீங்கள் ஒருவர்தான் பயணி'' என்றிருக்கிறார்.
"" அப்படி, என் ஒருத்திக்காக விமான சேவை நடக்குமா... விமானம் மணிலா போகுமா'' என்று பதட்டத்துடன் கேட்க.. ""கட்டாயம் நீங்கள் மணிலாவில் இறங்குவீர்கள்'' என்று பதில் வந்தது. கொஞ்சம் பயம் கொஞ்சம் தயக்கத்துடன் லூயிஸா இருக்கையில் அமர்ந்தார். தான் மட்டும் விமானத்தில் இருந்ததை படம் பிடித்துக் கொண்டார். விமான ஊழியர்களுடனும் படம் பிடித்துக் கொண்டார். கொஞ்ச நேரத்தில் விமானம் கிளம்பியது. லூயிஸா ஒரே ஒரு பயணியாகப் பயணித்தார். மணிலாவில் இறங்கியதும் லூயிஸா முதல் வேலையாக இந்த அபூர்வ சம்பவத்தைத் தனது முகநூலில் பதிவேற்றம் செய்ய, அது வைரல் ஆகியது என்று சொல்லவும் வேண்டுமோ..?