அழகான பாதத்திற்கு எதிரி பித்த வெடிப்புதான். நீங்களும் அந்த பாதிப்பால் அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம்.
இதை பின்பற்றிப் பாருங்கள்:
பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். அது உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு நன்கு கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் பித்த வெடிப்பு படிப்படியாக மறைய ஆரம்பித்துவிடும். மருதாணி இலையையும் இதுபோன்று பயன்படுத்தலாம்.
தரம் குறைந்த செருப்புகளை பயன்படுத்துவதாலும் பித்த வெடிப்புகள் வரலாம். அதனால், செருப்பு உங்கள் பாதத்தை பாதுகாக்குமா? என்பதை நினைவில் கொண்டு அதைத் தேர்வு செய்யுங்கள்.
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு, அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்துக் கொள்ளவும். இதை பாத வெடிப்பு உள்ள இடங்களில் தடவி, சிறிதுநேரம் கழித்து கழுவி விடுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வந்தாலும் பாத வெடிப்புகள் மறையும். வேப்ப எண்ணெய்யிலும் சிறிது மஞ்சள் தூளை கலந்து இதுபோன்று உபயோகிக்கலாம்.
முக்கியமாக, பாதத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். தூங்கச் செல்வதற்கு முன் பாதங்களை ஸ்க்ரப்பர் மூலம் நன்றாக தேய்த்துக் கழுவி, பித்த வெடிப்பு பகுதிகளில் தேங்காய் எண்ணெய்யை தடவிக் கொள்ளுங்கள். குளித்து முடித்ததும் பாதத்தில் ஈரம் இல்லாதவாறு துடைத்துக் கொள்ளுங்கள். மணல் பகுதியில் பாதுகாப்பான செருப்புடன் நடந்து செல்லுங்கள்.
இவற்றை பின்பற்றினால் பித்த வெடிப்பு காணாமலேயே போய்விடும்.