தமிழ் தொலைக்காட்சியின் "சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால், என்ன காரணத்தாலோ அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்பின், அதேபோன்றதொரு நிகழ்ச்சியை இணையதளத்தில் "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ' என்று நடத்தி வந்தார்.
தற்போது, கலைஞர் தொலைக்காட்சிக்காக அதே கான்சப்ட்டில் "நேர் கொண்ட பார்வை' என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். கடந்த 17-ஆம் தேதியில் இருந்து இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வியாழன் வரை ஒளிப்பரப்பாகும் இந்நிகழ்ச்சி குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில், "ஒவ்வொருவரும் வாழ்க்கையில் செய்யும் சின்ன சின்ன தவறுகளே சில நேரங்களில் அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடுகிறது. அப்படி செய்த சிறிய தவறினால் பெரிய மாற்றத்தை சந்தித்தவர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி இது. இதில் பேச தயங்குகிற விஷயங்களை தைரியமாக பேசவும், சமூக அவலங்கள், அவற்றின் மீதான மக்களின் கோபங்களை வெளிப்படுத்தவும் நல்ல வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி இருக்கும்'' என்றார்.