திருச்சியிலிருந்து சென்னை வரும் கல்லூரி மாணவி ஒருவர் இடையில் பேருந்து நின்றாலும், பேருந்தை விட்டு இறங்கவில்லை. சென்னை கோயம்பேடு வந்த பிறகு தான் பேருந்தை விட்டு இறங்கினார். அந்த மாணவியுடன் பயணித்த பெண் பயணி ஒருவர், தாய்மை உணர்வோடு ""ஏம்மா, திருச்சி ஏறினாதுல இருந்து, நீ தண்ணி குடிச்ச பார்க்கல. பாத்ரூம் போகல. இப்படி அடக்கி வைச்சு இருந்த உடம்பு கெட்டு போயிடும்'' என கேள்வி எழுப்ப, அந்த மாணவி சொன்னாள், ""ஆன்ட்டி இது எனக்குப் பழக்கமாகிடுச்சு. இடையில் பஸ் நிக்குற இடத்துல உள்ள பாத்ரூம் நான் யூஸ் பண்ணி யூரினரி இன்ஃபெக்ஷன் ஆகி இரண்டு வாரம் ரொம்ப கஷ்டப்பட்டேன்'' என்றார்.
பணிக்குச் செல்லும் பெண்கள் முதல், வெளியில் செல்லும் பெண்கள் வரை எவரும் பொது இடங்களில் கழிவறைகளைப் பயன்படுத்துவதில்லை. உண்மையில் அவைகள் பயன்படுத்தும் அளவிற்கு இருக்கிறதா என்றால் இல்லை. குறிப்பாக கழுவப்படாத, கதவுகள் இல்லாத பொதுக்கழிப்பிடங்களைப் பெண்கள் அல்ல, ஆண்களே பயன்படுத்த முடியாது.
லட்சக்கணக்கான பெண்கள் பெரும்பாலும் வெளிப்புறங்களில் சிறுநீர் கழிப்பதே இல்லை. இதனால் சிறுநீரகத்தில் நோய் தொற்று ஏற்பட்டு அவதிப்படும் பெண்கள் லட்சக்கணக்கானோர். இந்த 21-ஆம் நூற்றாண்டில் பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்ற நிலை வந்தாலும் தூய்மையான கழிவறைகள் எங்கும் கிடைப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.