"தெய்வமகள்' தொடரின் மூலம் சின்னதிரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த வாணிபோஜன். சமீபத்தில் வெளியான "ஓ மை கடவுளே' படத்தின் மூலம் பெரியதிரையில் கால் பதித்திருக்கிறார். படத்தில் இவர் இரண்டாவது நாயகிதான் என்றாலும், கிட்டத்தட்ட நாயகி ரித்திகா சிங்குக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விமான பணிப்பெண்ணாக தனது பயணத்தைத் தொடங்கிய வாணி போஜன், அவர் பணிபுரிந்த விமான சேவை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, விளம்பர மாடலாக விளம்பர படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்மூலம் சின்னத்திரைக்கு வந்தார்.
ஊட்டி மலைப் பகுதியில் படுகா இனத்தில் பிறந்த வாணி போஜன், ஆங்கில இலக்கியம் படித்தவர். இது குறித்து வாணிபோஜன் கூறுகையில், "எனது படிப்பு, பணி இரண்டுமே எங்களது இனப் பெண்களுக்கு ஓர் உந்து சக்தியாக இருக்கிறது. "தெய்வமகள்' சீரியல் நடிக்கும்போதே பெரிய திரையில் வாய்ப்புகள் வந்தன. அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டால், தொடரில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் என்பதால் வந்த வாய்ப்புகளை தட்டி கழித்து வந்தேன்.
பெரியத்திரை கைக்கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே சமயம் ரசிகர்கள் மனதில் நான் இன்னும் தெய்வமகள் சத்யாவாகத்தான் வாழ்ந்து வருகிறேன். அதனால் சத்யாவை மிஞ்சும் நல்ல கதாபாத்திரம் சினிமாவில் அமைய வேண்டும். அதுவரை காத்திருப்பேன்'' என்றார்.
- ஸ்ரீ