விரைவு செஸ் ஆட்டத்தில் ஆனந்த் விஸ்வநாதனுக்குப் பிறகு தங்கப் பதக்கம் வென்றிருப்பவர் கிரான்ட் மாஸ்டர் கொனேறு ஹம்பி. சமீபத்தில் மாஸ்கோவில் நடந்த சர்வதேச விரைவு செஸ் போட்டியில் சீனாவைச் சேர்ந்த லெய் டிங்கிஜியே என்பவரை கொனேறு வெற்றி கண்டார்.
விரைவு செஸ் போட்டியில் காய்களை நகர்த்த குறைவான நேரம் மட்டுமே அனுமதிக்கப்படும். பொதுவான செஸ் போட்டியில் காய்களை நகர்த்த தேவைப்படும் அளவுக்கு நேரம் வழங்கப்படும். கொனேறுவுக்கு முப்பத்திரண்டு வயதாகிறது.
ஆந்திர பிரதேசத்தில் "குடிவாடா' வில் கொனேறு 1987-இல் பிறந்தார். பதினைந்தாவது வயதிலேயே உலக சாம்பியனாக வெற்றி கண்டவர். இது குறித்து கொனேறு கூறியது:
"விரைவு செஸ் போட்டியில் நான் தங்கம் பெறுவேன் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. "டை பிரேக்கர்' ஆட்டத்தில் ஆட வேண்டிவரும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. எனது சீன போட்டியாளர் ஆட்டத்தில் முன்னேறிக் கொண்டிருந்தார்.
முதல் மூன்று ஆட்டத்தில் நான் வெற்றி பெறுவேன் என்ற எனது கணக்கு பலிக்கவில்லை. கடைசி இரண்டு ஆட்டத்தில் நான் ஜெயித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் முனைப்புடன் ஆடினேன்... வெற்றி பெற்றேன். போட்டி துவங்குமுன் நான் உலகத்தரத்தில் பதிமூன்றாவது ஸ்தானத்தில் இருந்தேன். தவிர விரைவு செஸ் போட்டியில் எனக்கு அத்தனை அனுபவம் இல்லை. இந்த வெற்றி எதிர்பாராத வெற்றிதான்'' என்கிறார் கொனேறு. இவர் திருமணமானவர். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் பணிபுரிகிறார்.