ஆன்மிக பயணத்துக்கு  வழிகாட்டும் நடனம்!

தமிழகத்திலிருந்து நடனம் தெரிந்த நடிகைகள் ஹிந்தித் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானாலும், முதன்முதலாக வட இந்திய ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வைஜெயந்திமாலாதான்.
ஆன்மிக பயணத்துக்கு  வழிகாட்டும் நடனம்!


தமிழகத்திலிருந்து நடனம் தெரிந்த நடிகைகள் ஹிந்தித் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானாலும், முதன்முதலாக வட இந்திய ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வைஜெயந்திமாலாதான். 1949-ஆம் ஆண்டு ஏ.வி.எம்மின் "வாழ்க்கை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான வைஜெயந்தி மாலா, பின்னர் அதே ஏ.வி.எம்மின் "பஹார்' திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும், பெங்காலி மொழியில் ஒரு படத்திலும் நடித்திருந்தாலும், ஹிந்திப் படங்கள்தான் இவரை அகில இந்திய அளவில் பிரபலமாக்கியது. பல ஆண்டுகள் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த வைஜெயந்திமாலா, தன்னைவிட இளையவர்களான தர்மேந்திரா, சஞ்சீவ் குமார், சத்ருகன் சின்கா போன்றவர்களுடனும் நடித்ததுண்டு. திலீப் குமாருடன் நடிக்கும்போது தான் ஜோடி பொருத்தம் பிரமாதமாக இருப்பதாக அவரது மனைவி சயிராபானுவே இவரிடம் கூறி பாராட்டியதும் உண்டு.

பரதநாட்டியத்தில் மட்டுமின்றி கர்நாடக சங்கீதத்திலும் இவர் தேர்ச்சிப் பெற்றதற்கு இவரது பாட்டி யதுகிரி மற்றும் நடிகையும் தாயாருமான வசுந்தராதேவிதான் காரணமாவார்கள். வைஜெயந்திக்கும் அவரது அம்மா வசுந்தராவுக்கும் 16 வயது மட்டுமே வித்தியாசம் என்பதால், வைஜெயந்திமாலா தன் அம்மாவை அக்கா என்றே அழைத்து வந்தாராம்.

சிறுவயதில் கே.பி. கிட்டப்பா பிள்ளை மற்றும் மயிலாப்பூர் கௌரி அம்மாவிடம் நடனமும், மணக்கால் சிவராஜ ஐயரிடம் கர்நாடக சங்கீதமும் கற்றுக் கொண்ட வைஜெயந்திமாலா, கர்நாடக இசையில் தன்னுடைய குரு. டி.கே.பட்டம்மாள் என்று கூறுவதுண்டு. பதிமூன்று வயதில் நாட்டிய அரங்கேற்றம் முடிந்தவுடன், 15-ஆவது வயதில் "வாழ்க்கை' படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு இவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அதன் பிறகு இவர் பள்ளிக் கூடத்திற்கு செல்லவே இல்லை.

அவர் அளித்த பேட்டியிலிருந்து...

""வாழ்க்கை' வெற்றிக்குப் பின் பல மொழிகளில் எடுக்கப்பட்ட அதன் ரீமேக் படங்களில் மட்டுமின்றி, ஏ.வி.எம். தயாரிப்பு படங்களில் மட்டுமே நான் நடிக்க வேண்டியதாயிற்று. ஏனெனில் ஏ.வி.எம்முடன் 5 ஆண்டு கால ஒப்பந்தம் இருந்ததால் வேறு தயாரிப்பாளர்கள் படங்களில் நடிக்க முடியவில்லை. ஒப்பந்தம் முடிந்து வேறு தயாரிப்பாளர்கள் படங்களில் நடிக்க தொடங்கியபோது, என்னுடைய நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களைத் தயாரித்தனர். இதனால் வைஜெயந்திமாலா படமென்றால் ஒரு நடனமாவது நிச்சயமாக இருக்குமென ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கினர்.

பிமல்ராய் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட "தேவதாஸ்' படத்தில் நான் ஏற்றிருந்த சந்திரமுகி பாத்திரம், என் நடிப்புக்கும், நடனத்திற்கும் முக்கியத்துவம் தரும் பாத்திரமாக அமைந்துவிட்டது. நடிப்பதை நான் கடினமாக நினைத்ததே இல்லை. நடனம் தெரிந்ததால் நடிப்பது சுலபமாக இருந்தது. இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக விருதும் கிடைத்தது.


நான் நடித்த படங்களில் தேவ் ஆனந்துடன் நடித்த "ஜூவல் தீப்', ராஜ்கபூரூடன் நடித்த "சங்கம்', திலீப் குமாருடன் நடித்த "கங்கா ஜமுனா', ராஜேந்திரகுமாருடன் நடித்த "கன்வார்' ஆகிய படங்களுடன் "மதுமதி', "நயாதவுர்', "சாதனா', "கத்புட்லி', "நாகின்', "பைகாம்', "நஸ்ரானா', "அம்ராபாலி' போன்ற படங்கள் வெற்றிப் பட்டியலில் இருந்தாலும், "வஞ்சிக்கோட்டை வாலிபன்' மறக்கமுடியாத படமாகும். அதில் நானும், பத்மினியும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆடிய நடனக்காட்சியில் உண்மையிலே நாங்களிருவரும் மெய்மறந்து உணர்ச்சிவசப்பட்டு ஆடினோம். "சபாஷ், சரியான போட்டி' என்று கூறிய போதுதான் நடனத்தை நிறுத்தினோம்.

இதுபற்றி ஒருமுறை அமெரிக்காவில் நானும், பத்மினியும் கலந்து கொண்ட கூட்டத்தில் என்னையும், என் நடனத்தையும் அவர் மிகவும் புகழ்ந்து பேசினார். உடனே நான் எழுந்து பத்மினியும் பரதநாட்டியம் தெரிந்தவர்தான். அதனால்தான் எங்கள் போட்டி நடனம் சிறப்பாக அமைந்துவிட்டது. ஒருவேளை அந்தக் காட்சியை மறுநாளும் எடுக்க வேண்டுமென்று இயக்குநர் கூறியிருந்தால் நிச்சயமாக எங்களால் முந்தைய நாளில் ஆடியதை போன்று ஆடியிருக்க முடியாது. இந்த நடனக் காட்சி வெற்றி பெற்றதற்கு பத்மினியும் ஒரு காரணம் என்று கூறினேன்.

நான் சினிமாவுக்கு வந்தது எப்படி எதிர்பாராத சம்பவமோ அதேபோல் நான் அரசியலுக்கு வந்ததும் எதிர்பாராதது தான். சென்னையில் ஒருமுறை ராஜீவ்காந்தி வந்திருந்தபோது, நானும் என் கணவர் பாலியும் அவரை சந்திக்கச் சென்றிருந்தோம்.

நேரு காலத்திலிருந்தே நான் அவரது குடும்பத்தைப் பற்றி தெரிந்து வைத்திருந்ததால், அவர் திடீரென என்னைப் பார்த்து மக்களவை தேர்தலில் போட்டியிடும்படி கேட்டுக் கொண்டார். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. என் கணவர் எனக்கு தைரியமூட்டி வேட்பு மனுவை தாக்கல் செய்து அரசியலில் ஈடுபடவைத்தார். காங்கிரஸ் சார்பில் இருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவிவகித்தபோது என்னால் இயன்ற அளவு தொகுதியின் வளர்ச்சிக்கும், மக்களுக்கும் உதவி செய்தேன். ராஜீவ்காந்தி மறைவுக்குப் பின் காங்கிரஸிலிருந்து விலகினேன். பின்னர் அரசியலில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை'' என்கிறார் வைஜெயந்திமாலா.

தற்போது என்ன செய்கிறீர்கள்?

""எனக்கு இப்போது 83 வயதாகிறது என்றாலும் இன்னமும் மேடையேறி நடனமாடுவதை விட முடியவில்லை. சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த காலத்திலும் நான் இசையையும், நடனத்தையும் விடவில்லை. இவை இரண்டுமே எனக்கு ஆத்ம திருப்தியை அளிப்பவையாகும். தற்போது நடன ஆய்வு மையமொன்றை அமைத்து, அபூர்வமான தஞ்சை நடனங்களை ராகம், தானம், பல்லவியுடன் அமைத்து வாய்ப்பு கிடைக்கும்போது சபாக்களில் நடத்தி வருகிறேன். நடனத்தில் மட்டும் வேறு பாணிகளை புகுத்த நான் விரும்பவில்லை. நடனம் என்றுமே எனக்கு யோகா, தியானம் மற்றும் ஆன்மிக பயணத்திற்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறது'' என்கிறார் வைஜெயந்திமாலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com