நமது பாரம்பரியத்தை வளர்த்த பெருமைக்குரியவர்கள் நம்முன்னோர்கள். அந்தவகையில், கலை வளர்த்த, மொழி வளர்த்த, பாணர், கழைக்கூத்து, பாவை கூத்து, பொம்மலாட்டாம், பரதநாட்டியம், கூத்து, நாடகம் ஆகியவற்றின் கலைஞர்களின் பணி மகத்தானது.
அந்த வரிசையில், புதுக்கோட்டை மாவட்டம், கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்ப்பவர்களை வியக்க வைத்தது.
இக்கல்லூரியைப் பொருத்தவரைக்கும் சமூக நலனில் அக்கறை கொண்ட கல்லூரி என்றுதான் சொல்லவேண்டும். காரணம், ஆண்டு தோறும் இலங்கை அகதிகள் மூகாமைச் சேர்ந்த மாணவிகளுக்கு இலவச கல்வியை நிர்வாகம் அளிக்கிறது. அதுபோன்று இக்கல்லூரி மாணவிகள் ஒன்று சேர்ந்து பார்வையற்றோர் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்குதல், முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அறக்கட்டளைகள் மூலமாக நடத்தப்படும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் வழங்குதல் போன்ற எண்ணற்ற சேவைகளை செய்து வருகின்றனர்.
சமீபத்தில், பொங்கல் திருநாளையொட்டி இருபதுக்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். முதல் நாளில் பரதநாட்டியத்தோடு தொடங்கிய விழாவில் தமிழ் நாடகங்களும் அரங்கேறியது. குறிப்பாக, "சத்தியவான் சாவித்திரி', "குமரி அன்னை', "ராஜ ராஜ சோழன்', "நரசிம்மஅவதாரம்', "அரிச்சந்திரா மயான காண்டம்', "சரஸ்வதி சபதம்', "திருவிளையாடல்' போன்ற புராண நாடகங்களும், பெண்களின் விழிப்புணர்வுக்காக பெண் கல்வியே உயர்வு, தாயின் அரவணைப்பில் மகள், ஆண்- பெண் சமத்துவம், இணையதளத்தினால் உண்டாகும் தீமைகள், மாதவிடாயும்- பெண்களின் பெருமையும், சுற்றுச்சூழல் பாதிப்பு, ராணுவத்தின் முக்கியம், மதவொற்றுமை, பாலியல் வன்கொடுமை, விவசாயமும்- வியர்வையும் போன்ற நவீன யுகத்துக்கு தேவையான நாடகங்களையும் அரங்கேற்றினர்.
மேலும், நாட்டுப்புறக் கலையை வளர்க்கும் விதமாக நாட்டுப்புறப் பாடல்கள், இந்தியாவின் பாரம்பரிய உடைகளை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாடு, ஆந்திரா, பிகார், குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிஸô, ராஜஸ்தான், திரிபுரா, மேற்கு வங்காளம்,பஞ்சாப், மணிப்பூர் போன்ற 20- க்கும் மேற்பட்ட மாநிலங்களின் கலாசார உடைகளின் ஆடை அலங்காரப் போட்டி போன்றவற்றையும் நடத்தி சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.