கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நீரிழிவுநோய் பாதிப்பு!

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அறிவுறுத்தி வரும்நிலையில், கரோனா தொற்று ஏற்பட்டு மீண்டு வந்தவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான
கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நீரிழிவுநோய் பாதிப்பு!


நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அறிவுறுத்தி வரும்நிலையில், கரோனா தொற்று ஏற்பட்டு மீண்டு வந்தவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், பலரும் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாகவும் அதிர்ச்சி தகவலைக் கூறுகிறார், மோகன் டயாபடீஸ் மருத்துவ மனையின் நீரிழிவுநோய் சிறப்பு மருத்துவரான அஞ்சனா மோகன். 

இது குறித்து மேலும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டிருப்பது உண்மைதானா? என்ன காரணம்?

உண்மைதான், இதுவரை நீரிழிவு நோய் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தவர்கள், கரோனா தொற்று ஏற்பட்டு, மீண்டு வந்தபின், சர்க்கரையின் அளவு கூடி தற்போது அதிகளவில் எங்கள் மருத்துவமனைக்கு சோதனைக்கு வருவதை பார்க்கிறோம். அப்போதுதான் கரோனா ஏற்பட்டு மீண்டவர்களுக்கு உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை உணர்ந்தோம். இதனால், தொற்று ஏற்பட்டவர்களுக்கு சர்க்கரையின் அளவு கூடுவதற்கு என்ன காரணம் என்று கண்டறிய, ஒரு ஆய்வைத் தொடங்கியிருக்கிறோம்.

உதாரணமாக, கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருபவர்கள், இரண்டு விதமாக பார்க்கப்படுகிறார்கள். அதாவது, ஏ சிம்டமெடிக் இன்டிஜுவல் எனப்படுபவர்கள் ஒருவிதம். இவர்கள் அறிகுறி எதுவுமே இல்லாமல் பாதிக்கப்படுபவர்கள். இன்னொன்று அறிகுறிகள் தெரிந்து பாஸிட்டிவாகி குணமானவர்கள், அதில் சிலர் அதிக பாதிப்பினால், ஐ.சி.யூ அளவில் சென்றவர்களுக்கு உயிரை காப்பாற்றுவதற்காக ஸ்டீராய்ட் கொடுக்கப்படுகிறது. இப்படி ஸ்டீராய்ட் எடுத்துக் கொள்வதனாலும் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மற்றொன்று கணையத்தில் பீட்டா செல்ஸ் என சின்ன சின்ன செல்ஸ் இருக்கிறது. இது ஒரு தீவு போன்று கூட்டம் கூட்டமாக இருக்கும். சாதாரணமாகவே, சில நேரங்களில் வைரஸ் தொற்று ஏற்பட்டால், அது முதலில் இந்த பீட்டா செல்களைதான் டார்கெட் செய்து அழிக்கும். இந்த பீட்டா செல்கள் இன்சுலினை உற்பத்தி செய்ய கூடியவை. இது அழிந்து விட்டால் இன்சுலின் உடலில் சுரக்காது. அப்படி இன்சுலின் சுரப்பு ஏற்படாவிட்டால் அது நீரிழிவு நோயாகும்.

இதே பாதிப்புதான் கரோனா தொற்றினாலும் ஏற்படுகிறது என்று நினைக்கிறோம்.

மற்றபடி நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு, ஒரு முக்கிய காரணமாக கருதப்படுவது மன அழுத்தம். ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், அது அவரது உடலில் உள்ள உள் உறுப்புகளை பாதிப்படைய செய்துவிடுகிறது. இதனால், நீரிழிவுநோய் ஏற்படுவதற்கான ரிஸ்க் அதிகம் உள்ளது.

இப்போது நீங்கள் மேற்கொண்டு வரும் ஆய்வு குறித்து?

முதல் கட்டமாக, எங்களிடம் புதிதாக வரும் நோயாளிகளிடம் இதற்கு முன் நீரிழிவு குறித்த அறிகுறிகள் ஏதும் இருந்துள்ளதா அல்லது கரோனா தொற்றுக்கான அறிகுறி ஏதும் தென்பட்டதா அல்லது கரோனா ஏற்பட்டு மீண்டு வந்தவர்களா போன்ற தகவல்களை சேகரித்து வருகிறோம். இதன் மூலம் யார் என்ன மாதிரியான டைப், அவர்களுக்கு எதனால் நீரிழிவு ஏற்பட்டிருக்கிறது, இதற்கு முன்பு அவர்களுக்கு சர்க்கரையின் அளவு எவ்வளவு இருந்தது. ஏதாவது மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டார்களா போன்றவற்றையெல்லாம் ஆராய்ந்து வருகிறோம். இதில் சிக்கல் என்னவென்றால், மக்கள் கரோனாவை பற்றி சொல்வதற்கு மிகவும் பயப்படுகிறார்கள். அவர்கள் தயக்கம் இல்லாமல் உண்மையைச் சொன்னால், எங்கள் ஆய்விற்கு இன்னும் உதவியாக இருக்கும்.

அதேசமயம் நாங்கள் மேற்கொண்ட இன்னொரு ஆய்வில், கரோனா நோய் தொற்று ஏற்படாமல், ஏற்கெனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை வைத்து ஆராய்ந்ததில், கண்டறிந்தது என்னவென்றால், இந்தப் பொது முடக்கத்தினால், நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுப் பாட்டில் உள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால், வீட்டுச் சாப்பாடு, அலுவலக டென்ஷன் இல்லாதது, டிராவல் செய்யாமல் இருப்பது போன்ற வற்றினால் மன அழுத்தம் குறைந்திருக்கிறது.

எடை குறைந்திருக்கிறது. எனவே அவர்கள் இந்த பொதுமுடக்கத்தில் முன்பைவிட தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார்கள். மருத்துவமனைக்குச்
செல்வதே குறைந்துள்ளது.

கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள நீரிழிவு நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, எச்.பி. ஒன். சி. (அவரேஜ் குளுக்கோஸ் ரீடிங்) என சொல்லப்படுவது 7 -க்கு கீழ் இருந்தால், நார்மல். அவர்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அதுவே 8 -க்கு மேல் இருந்தால், தொற்று விரைவாக பரவும் ரிஸ்க் அதிகளவில் உள்ளது.

இரண்டாவது, நீரிழிவு நோயாளிகளுக்கென்று தடுப்பூசி இருக்கிறது. அதாவது கரோனாவுக்கு தடுப்பூசி இல்லையென்றாலும், கரோனாவினால் ஏற்படும் தொற்று நுரையீரலை பாதிக்கும். இது கரோனா என்றில்லை. இதற்கு முன்பு ஏற்பட்ட இன்புளூயன்சா வைரஸ் தொற்று, நியூமோகாக்கஸ் வைரஸ் போன்றவையும் கரோனா வகையைச் சார்ந்ததுதான். இதுவும், நுரையீரலை தாக்கக் கூடியதுதான். இதற்கெல்லாம் ஏற்கெனவே தடுப்பூசி இருக்கிறது. அதை இந்த சமயத்தில் எடுத்துக் கொண்டால் , நுரையீரலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி ஓரளவு பாதுகாக்கும். தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகு கரோனா வந்தாலும், அது மிகவும் மோசமான நிலைக்கு தள்ளாமல் பாதுகாக்கும்.

இந்தக் காலகட்டத்தில் என்ன மாதிரியான உணவுகள் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம்?

சாலட் வகை, சூப், மோர் இவையெல்லாம் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், வெள்ளை சாதம், இனிப்பு வகைகள், பொரித்த வகைகள், வாழைப் பழம் போன்றவை உடனடியாக சர்க்கரையின் அளவை கூட்டக் கூடியது. அதுபோன்று பழ வகைகள் சாப்பிட விரும்புபவர்கள், ஆப்பிள், பப்பாளி, ஆரஞ்சு, கொய்யா போன்றவற்றை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். அதுவே, மாம்பழம், சப்போட்டா போன்றவற்றில் இனிப்பு சுவை அதிகம் இருப்பதால் இதையெல்லாம் தவிர்த்து விட வேண்டும். அதனால், இதைத்தவிர, தினமும் ஏதாவது சிறு சிறு உடற்பயிற்சி அல்லது நடைப் பயிற்சி மேற்கொள்வது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com