தினமணி 9.6.2021 இதழில் வெளிவந்த "ஒலிசித்திரம்: ராஜாவும் நானே ராணியும் நானே' கட்டுரை படித்தேன். இன்றைய காலச் சூழலில் மக்கள் புத்தகங்களை மறந்து வரும் நிலையில், அதனை ஆடியோ புத்தகங்களாக மக்களிடம் கொண்டு செல்லும் தீபிகா பாராட்டுகுரியவர்.
மல்லிகா அன்பழகன், சென்னை.
"மறக்க முடியாத வாய்ப்பு பத்தாயிரம் பேருக்கு சமையல்' என்ற கட்டுரையில் தேன்மொழியின் அறப்பணியை பற்றி அறிந்தோம். இளவயதில் பலவித இடர்களை அனுபவித்து; பின் சமையல் கலையை கற்றுக் கொண்டு இந்த கரோனா காலத்தில் சேவை உள்ளத்துடன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உணவளித்து வரும் அவரின் கருணை உள்ளத்தை எண்ணி நெகிழ்ந்து போனேன்.
ராணி சண்முகம், திருவண்ணாமலை.
"முதலில் உயிர் பாதுகாப்பு' பின்னர், கோப்பை, மெடல், விருது, பதக்கம் என்று அன்புடன் வலியுறுத்தும் பி.வி. சிந்து ஓய்வு நேரத்தை தியானம் செய்வதிலும், ஓவியங்கள் வரைவதிலும் செலவிடுவதும் சிறந்த மன அமைதிக்கான பயிற்சிதான்.
இ.ராஜு நரசிம்மன், சென்னை.
"சேவையாலும் கல்வியாலும் மக்களை கவர்ந்தவர்' என்ற கட்டுரை படித்தேன். திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டி புதூர், அரசு தொடக்கப் பள்ளி. உதவி ஆசிரியர் ஹ.புஷ்பலதா கடந்த ஆண்டு கரோனா காலத்திலிருந்து, இக்காலம் வரை அருந்த தொண்டாற்றி ஏழை மக்களுக்கு உதவி செய்யும் விதம் பாராட்டுக்குரியது.
ஜே.மகரூப், குலசேகரன்பட்டினம்.
"அருமருந்து' எனும் கதை சொல்லும் குறள் படித்தேன். கோபத்தை விட்டால் தீமை வராது என்பதை குறள் மூலம் விளக்கியுள்ளது அருமை. இதுபோன்ற கதைகளை நாம் படிக்க படிக்க மனம் பக்குவப்படும் என்பது நிதர்சனம்.