விண்வெளியில் முதல் பெண்மணி!
விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக இருபெண்கள் மட்டுமே நடத்திய வின்வெளி நடை உலகின் கவனத்தை ஈர்த்தது. அமெரிக்க விண்வெளி வீராங்கனைகள் கிறிஸ்டினா கொச், ஜெஸிகா மேயர் ஆகியோர், விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து வெளியே வந்து விண்வெளியில் நடைபோட்டனர். விண்வெளி ஆய்வு நிலையத்தின் பழுதான பேட்டரி சார்ஜ் - டிஸ்சார்ஜ் யூனிட்டை மாற்றி வைப்பதற்காக, இந்த இரு பெண்களும் விண்வெளியில் நடந்தனர்.
இதற்கு முன்பு பெண்கள் விண்வெளியில் நடந்த போதெல்லாம், கூடவே ஒரு விண்வெளி வீரரும் உடனிருந்தார்.
அந்த வகையில், ரஷ்யாவின் விண்வெளி வீராங்கனை ஸ்வெட்லேனா ஸ்விட்ஸ்கா எனும் பெண்மணியே விண்வெளியில் நடந்த முதல் பெண்மணி.
மேன்புக்கர் விருது!
ஓமன் நாட்டைச் சேர்ந்த ஜோகா அல்ஹரத்தி என்ற பெண் எழுத்தாளரின் "செலஸ்டியல் பாடீஸ்' என்ற அரபு நாவலுக்கு விருது வழங்கப்பட்டது. நவீன உலகில் அடிமைகளாக வாழும் மூன்று சகோதரிகள் எதிர் கொள்ளும் பிரச்னைகளை இந்த நாவல் விவரிக்கிறது.
மேன் புக்கர் விருதைப் பெற்ற முதல் அரபு மொழி எழுத்தாளர் என்ற பெருமையை ஜோகா அல் ஹரத்தி பெற்றுள்ளார்.
பரிசுத் தொகையில் பாதியை, அந்த நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியருக்கு வழங்க உள்ளதாக ஜோகா அல்ஹரத்தி அறிவித்துள்ளார்.
துப்பாக்கி கலாசாரத்துக்கு தடை
கிறைஸ்ட் சர்ச் தீவிரவாதத்தை அடுத்து, உலகின் கவனத்தை தன்பக்கம் திருப்பிய பெண்மணி நியூசிலாந்து பிரதமர், 2017 தேர்தலில், தொழிலாளர் கட்சியை ஆட்சியில் அமர்த்திய போதே, ஜெஸிந்தா உலகச் செய்திகளில் இடம் பெற ஆரம்பித்துவிட்டார். பிரதமராக இருக்கும்போது, ஒரு தாயாக மாறிய இவர், தனது மூன்று மாத கைக்குழந்தையுடன் ஐ.நா. பொதுச் சபையில் பங்கேற்றபோது, இவரது தனித்துவத்தை உலகம் உணர்ந்தது. உலகை அதிர்ச்சிக் குள்ளாக்கிய கிறைஸ்ட் சர்ச் சம்பவத்தில் ஜெஸிந்தாவின் அணுகுமுறை ஒரு தலைவியின் மாண்பை உலகுக்கு எடுத்துக் காட்டியது. தலையில் முக்காடு இட்டபடி, பலியான இஸ்லாமிய குடும்பங்களுக்குச் சென்று ஆறுதல் சொன்னார் ஜெஸிந்தா. அந்தச் சூழலில் ஜெஸிந்தாவின் இந்த முதிர்ச்சி நடவடிக்கையை உலகமே பாராட்டியது. துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த ஒரு வாரத்தில் நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு தடை விதித்தார்.