சேனைக்கிழங்கை வேக வைக்கும் முன் வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது உப்புப் போட்டு வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு நீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கைப் போடவும். விரைவில் பதமாக வெந்து பக்குவமாகவும், சுவையாகவும் இருக்கும்.
கொத்துமல்லி, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை வகைகளை உடனே ஆய்ந்து காற்று வெளிச்சத்தில் பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு வாரமானாலும் கெடாமல் இருக்கும்.
தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற கலந்த சாதங்கள் செய்யும் போது பொட்டுக்கடலையை நன்கு வறுத்து போட்டு கிளறினால் மிகவும் சுவையாக இருக்கும்.
காரம் சேர்த்து செய்யும் பலகாரங்களுக்கு காரப்பொடி போடாமல், பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய் உடன் சிறிது தண்ணீர்ச் சேர்த்து அரைத்து, வடிகட்டி, அந்த தண்ணீரைப் பயன்படுத்தினால் பலகாரங்கள் சுவையாகவும், நல்ல நிறமாகவும் இருக்கும்.
கேரட்டை மெலிதாக சீவி, தக்காளியுடன் லேசாக வதக்கி, உப்பு போட்டு சாதத்துடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பினால் சத்தான, கலர்ஃபுல் சாதம் தயார்.
சுக்குப்பொடியுடன் வெல்லம், தேன் இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து சிறுசிறு உருண்டைகளாக பிடித்து சாப்பிடலாம். சுவையாக இருப்பதோடு, சுக்கு ஜீரண சக்திக்கு நல்லது.
கீரை, வெண்டைக்காய், வேக வைக்கும் போது பாத்திரத்தை சிறிது திறந்து வைத்தால் காயின் பசுமை நிறம் மாறாமல் இருக்கும்.