சரோஜினி நாயுடுவின் மூத்த மகள் பத்மஜா நாயுடு. தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போலச் சேலை என்பார்களே அதைப்போன்று பத்மஜாவும் தனது 21- ஆவது வயதிலிருந்தே விடுதலைப் போரில் கலந்து கொண்டார்.
1942-ஆம் ஆண்டு "வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறை சென்றார்.
பின்னர் சுதந்திர இந்தியாவில், அதாவது 1956 முதல் 1967 வரை பத்மஜா நாயுடு மேற்கு வங்க கவர்னராகச் சிறப்பாகப் பணியாற்றினார். நேருவிடம் மிகவும் பிரியமாக இருந்தார். இதனால், நேரு மறைவுக்குப் பிறகு, தில்லியில் நேரு நினைவு காட்சியகம், நூலகம் ஆகியவற்றை நிர்மாணித்து, பராமரிக்கும் நிர்வாக சபையின் தலைவராக இறுதிவரை பணியாற்றினார்.
செஞ்சிலுவைச் சங்க இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதன்காரணமாக, வங்க தேசப் போரின்போது போர் அகதிகளுக்கு இவர் தலைமையில் செஞ்சிலுவை சங்கம் உதவிகள் செய்தது.
பாரத் சேவக் சமாஜ், அனைத்திந்திய கைவினைப்பொருள்கள் போர்டு, மற்றும் நேரு நினைவு நிதி போன்ற அமைப்புகளில் பொறுப்பு வகித்திருந்தார்.
இவரது நினைவாக, டார்ஜிலிங்கில் உள்ள இமாலய விலங்கியல் பூங்காவுக்கு இவருடைய பெயரைச் சூட்டியுள்ளார்கள்.
1962 -ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. புதிய பாரதத்தின் தலைசிறந்த பெண் நிர்வாகிகளில் ஒருவர் பத்மஜா நாயுடு.
கிளமெண்ட் ஈசுவர் எழுதிய "முதன்மைப் பெண்டிர்' நூலிலிருந்து.