மாநகரப் பேருந்துகள், நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. பணிக்குச் செல்லும் பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திட்டத்தில் முக்கியமான விஷயங்களை பெண்கள் கவனிக்க வேண்டியது இருக்கிறது.
தமிழக முதல்வராக, மே 7-ஆம் தேதி பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அன்றைய தினமே மாநகர, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
பெண்களைப்போன்று, திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அவர்களது உதவியாளர்களும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நாள்தோறும் பல லட்சம் பேர் இலவசமாகப் பயணித்து வருகின்றனர்.
இந்த இலவசப் பயணம் மேற்கொள்வோர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் உள்ளன. இதன்படி, பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை.
இலவசப் பயணத்துக்காகக் கட்டணமில்லா பேருந்துச் சீட்டு அச்சிடப்பட்டு நடத்துனர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் ஏறியவுடன் இந்தக் கட்டணமில்லா சீட்டை கண்டிப்பாக உடனே பெற வேண்டும். இல்லாவிட்டால், பயணச்சீட்டு பரிசோதகர்கள் பரிசோதித்தால், நடத்துனர்கள் நடவடிக்கையில் பாதிக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த இலவச பயணத்தால் போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்படும் இழப்பு, கட்டணமில்லா பயணச்சீட்டுகள் வாயிலாகக் கணக்கிட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் இழப்பீட்டு மானியமாக வழங்கப்படும். இவ்வாறாக, ரூ.1,000 கோடி வரையில் ஆண்டுதோறும் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆகவே, நடத்துனர் பாதிக்கப்படாமல் இருக்கப் பயணச்சீட்டு பெறுவது அவசியம்.