மும்தாஜ் இறந்ததும் மன்னன் ஷாஜஹான் வெண்ணிற சலவைக் கற்களால் தாஜ்மஹாலை காதலின் சின்னமாகப் பிரம்மாண்டமாகக் கட்டினான். அது உலக அதிசயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
ஆனால், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் சவுக்ஸி என்பவர், தனது அன்பு மனைவி மஞ்சுஷாவுக்காக, அவர் வாழும் போதே அன்பின் சின்னமான தாஜ்மஹால் வடிவில் ஒரு வீட்டைக் கட்டி அன்பளிப்பு செய்திருக்கிறார்.
நான்கு படுக்கை அறைகள் கொண்ட இந்த மினி தாஜ்மஹால் 8000 சதுர அடி விஸ்தீரணம் கொண்டது. கட்டி முடிக்க மூன்று ஆண்டுகள் ஆனதாம். செலவு சுமார் இரண்டரை கோடி. தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கும் வீட்டு மனையின் மதிப்பு கட்டுமானத்தில் சேர்க்கவில்லை.
ஆனந்த் பிரகாஷ் கூறுகையில், ""மஞ்சுஷா என்னைப் புரிந்து கொண்டு ஒவ்வொரு தருணத்திலும் எனக்கு சக்தியாகச் செயல்பட்டு வருகிறார். கஷ்டத்திலும் நஷ்டத்திலும், மகிழ்ச்சியிலும் சம பங்கு வகிக்கிறார். அவரது ஒரே வேண்டுகோள் "எனக்கு தியானம் செய்ய தனி அறை வேண்டும்' என்பதுதான்.
அந்த அறையை மிகுந்த கவனம் செலுத்தி சிறப்பாக அமைத்திருக்கிறோம். இந்த குட்டி தாஜ்மஹால், பெரிய தாஜ்மகால் இருக்கும் ஆக்ராவிலிருந்து 500 மைல் தூரத்தில் பர்ஹான்பூர் நகரில் உள்ளது. இந்த நகரில் தான் ஷாஜஹான் மனைவி மும்தாஜ் மரணமடைந்தார்'' என்கிறார் ஆனந்த் பிரகாஷ் சவுக்ஸி. ஆனந்த், பர்ஹான்பூர் நகரில் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.