தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஸ்வேகாவுக்கு அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை ரூ. 3 கோடி உதவித்தொகையுடன் பயில அனுமதி கிடைத்துள்ளது.
ஸ்வேகா, ஈரோடு மாவட்டம் காசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான சாமிநாதன்- சுகன்யா தம்பதியினரின் மகளாவார்.
ஸ்வேதா தற்போது ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்து உள்ளார். மேலும், இவர் 10 -ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே டெக்ஸ் டெரிட்ரி குளோபல் என்ற நிறுவனத்தில் தலைமைத்துவ மேம்பாடு மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டங்களில் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிறுவனம் கிராமப்புறம் அல்லது தொலை தூர நகரங்களை சேர்ந்த மாணவர்களை உலகளாவிய கல்வி வாய்ப்புகளுடன் இணைக்கும் தளமாக செயல்பட்டு வருகிறது. அதன் பயனாக ஸ்வேகாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து மாணவி ஸ்வேகா கூறுகையில், ""ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன். பிளஸ்-1 சேரும் முன்பே டெக்ஸ் டெரிட்ரி குளோபல் அமைப்பைப் பற்றி அறிந்து இதில் சேர்ந்தேன். கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைனில் பயிற்சி பெற்று வந்தேன். சமீபத்தில் ஆன்லைன் மூலம் உலகளாவிய தேர்வு நடைபெற்றது. இதில் நான் சிறப்பிடம் பெற்றதற்காக எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார்.