தெற்கு ஆப்ரிக்காவில் உள்ள மாலி நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஹலிமா சிஸ்ஸி. 25 வயதாகும் இவர், சில மாதங்களுக்கு முன் கர்ப்பமுற்றார். அவரை ஸ்கேன் செய்து பார்த்த போது, 7 குழந்தைகள் அவரது வயிற்றில் இருப்பதாகக் கண்டுபிடித்தனர் மருத்துவர்கள். இந்த தகவல் ஊர் முழுக்க பரவி அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை முறையாக வழங்க மாலி அரசும் உத்தரவிட்டது.
இந்நிலையில் அவருக்கு கடந்த வாரத்தில் பிரசவவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எல்லோரும் 7 குழந்தைகள் பிறக்கும் என எதிர்பார்த்த நிலையில் எதிர்பார்ப்புக்கு மேலாக 9 குழந்தைகள் பிறந்துள்ளன. இது அங்கிருந்த ஒட்டுமொத்த மருத்துவக் குழுவுக்கும் ஆச்சரியமாக அமைந்தது. பிறந்த 9 குழந்தைகளில் 5 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் ஆகும்.
தற்போது, தாயும் , சேயும் நலமாக உள்ளனர். இதற்கிடையே, இந்த நிகழ்வு கின்னஸ் சாதனை நிகழ்வாக பார்க்கப்படுகிறது. எனவே, விரைவில் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெறவுள்ளது. இதற்கு முன், அமெரிக்காவைச் சேர்ந்த நாடியா சுலேமான் என்பவர் 8 குழந்தைகளைப் பெற்றெடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய மாலி சுகாதாரத்துறை அமைச்சர் பாண்டா சிபி, ""ஐந்து சிறுமிகளும் நான்கு சிறுவர்களும், அவர்களின் தாயும், அனைவரும் நன்றாக இருக்கிறார்கள். சிஸ்ஸிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினருக்கு எங்களது நன்றிகள். அடுத்த சில வாரங்களில் தாயும், குழந்தைகளும் சொந்த ஊர் திரும்புவர்'' என்று கூறியுள்ளார்.