கரோனா மாற்றம் ஏற்படுத்தாத துறைகளே கிடையாது. அதில் ஒன்று சின்னத்திரை. முற்றிலும் படப்பிடிப்பு நடைபெறாததால் டி.வியில் தொடர்கள் ஒளிப்பரப்பாக வில்லை. ஆனால் ஒ.டி.டியில் சினிமா படங்கள் தொடர்ந்து வெளியாகின. இதனால் நெடுந்தொடர் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒ.டி.டி பக்கம் திரும்பியுள்ளது. இதனால் வரும் காலங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து விடக்கூடாது என்பதற்காக முன்னணி தொலைக்காட்சி மக்களிடம் வரவேற்பு பெற்ற தொடர்களை மீண்டும் ஒளிப்பரப்பி வருகின்றன.
சன் டி.வியில் வெளியான "தெய்வ மகள்', "நாயகி' தொடர்கள் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படுகின்றன. இது போன்று ஜெயா டி.வியில் ஒளிப்பரப்பான "கோபுரங்கள் சாய்வதில்லை' தொடரும் மீண்டும் ஒளிப்பரப்படுகிறது. ஆனால் ஒ.டி.டியில் இருந்து பார்வையாளர்கள் மீண்டு சின்னத்திரை பக்கம் வருவார்கள் என்பது சந்தேகமே. காரணம் பல மொழிகளில் வெளியாகும் புதுப்படங்கள் தொடர்ந்து ஒ.டி.டியில் வெளியான வண்ணம் உள்ளன.