குழந்தைகளுக்கு வயதிற்கு ஏற்ற வெடிகளை வாங்கிக்கொடுங்கள். சிறுவயதினருக்கு அணுகுண்டு, புல்லட் வெடி, ராக்கெட் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
மொட்டை மாடி, திறந்தவெளிகளில் பட்டாசு வெடிப்பது சிறந்தது.
குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது, அருகில் பெற்றோர் கட்டாயம் இருக்க வேண்டும்.
பட்டாசு வெடிக்கையில் பெரும்பாலும், தளர்வான காட்டன் துணிகளை உடுத்தியிருப்பது நல்லது.
பட்டாசு வெடிக்கும்போது ஒரு பக்கெட் தண்ணீரை அருகில் வைத்து கொள்வது சிறப்பானது. விபத்து ஏற்பட்டால், உடனே தண்ணீரை ஊற்றி அணைக்கலாம்.
சுவாசப் பிரச்னை இருப்பவர்கள், பட்டாசு வெடிக்கும் இடத்தில் புகை நிறைய இருக்கும் என்பதால், அங்கே நிற்பதை தவிர்ப்பது நல்லது.
சில குழந்தைகள் பட்டாசை கையில் பிடித்து கொளுத்திப்போடும் பழக்கம் வைத்திருக்கிறார்கள். அவ்வாறு கொளுத்திப்போடுவது மிக மிக ஆபத்தான விஷயம். இம் மாதிரி பட்டாசு வெடிப்பதை பெரியவர்கள் ரசித்து மகிழாமல், தவிர்த்து விட வேண்டும்.
வெடி வெடிக்கையில் உடலில் தீக்காயம் ஏற்பட்டால் தண்ணீர் ஊற்றக்கூடாது என்று சிலரும், தண்ணீர் ஊற்றலாம் என்று சிலரும் கூறுகிறார்கள். இதில் குழப்பமே வேண்டாம். மருத்துவர்கள் ஆலோசனைப்படி தீக்காயத்தின் மீது தண்ணீர் ஊற்றலாம். தப்பில்லை. தீக்காயத்தின் மீது தண்ணீர் ஊற்றுவதால், தோலில் ஏற்படும் சூடு குறையும். காயத்தின் ஆழம் அதிகமாகாது.