ஒன்பது நாள்கள் துர்கா பூஜை செய்வது மேற்கு வங்காளம் போல் இந்தியாவில் வேறு எங்குமே காண முடியாது. துர்க்கை பார்வதி பிறந்த பூமியாகத் தங்கள் மாநிலத்தைக் கருதும் அவர்கள் அவள் வரவையும், தங்களுடன் தங்கி இருத்தலையும், பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
களிமண்ணாலும், தக்கைகளாலும் செய்த துர்க்கை உருவங்களுக்கு விதவிதமான உபசாரங்கள் எல்லாம் செய்வார்கள்.
நவராத்திரியில் பார்வதி தேவி தன் கணவன் வீட்டில் இருந்து பிறந்த வீட்டிற்குச் செல்வதாக வங்காளிப் பெண்களின் நம்பிக்கை.
பிறந்த வீட்டிற்கு வரும் தன் மகளை ஹிமவானும் அவன் மனைவியும் சீராட்டி அவளுக்கு சீராக சகல சௌபாக்கியங்களையும் அள்ளித் தருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் சார்பாக பிறந்த வீட்டிற்கு வரும் தம் பெண்களுக்கு நவராத்திரி ஒன்பது நாள்களும் புதுப் புடவை, வளையல் சாமான்கள் முதலியவற்றை கொடுத்து வரவேற்பது வங்காளிகளின் வழக்கமாக உள்ளது.