நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்பாளை நினைத்து மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படக்கூடிய பண்டிகையாகும். இந்நாளில் அம்பாளின் அருளைப் பெற வீட்டில் கொலு வைப்பது ஐதீகம். இந்த ஒன்பது நாளும் பூஜை முடிந்ததும் ஒவ்வொரு இரவும் அன்றைய தினம் நல்லபடியாக கழிந்தது என்று அம்பாளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகஒவ்வொரு வகையான ஆரத்தி எடுக்கலாம்.
பூ ஆரத்தி: ஒரு தட்டில் பூ இதழ்களை பரப்பி நடுவில் ஒரு அகல் விளக்கு வைத்து தீபம் ஏற்றி ஆரத்தி எடுக்கலாம்.
முத்து ஆரத்தி: முத்து மணிகளை மைதா தடவிய தட்டில் கோலம் போன்று ஒட்ட வைத்து நடுவில் தீபம் ஏற்றி ஆரத்தி எடுக்கலாம்.
தீப ஆர்த்தி: மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்து அதில் பூ இதழ்களைத் தூவி நடுவில் தீபம் ஏற்றி ஆரத்தி எடுக்கலாம்.
முக்கூட்டு ஆரத்தி: மஞ்சள், பன்னீர், சந்தனம் இவை மூன்றும் கலந்து நடுவில் தீபம் ஏற்றி ஆரத்தி எடுக்கலாம்.
நவதான்ய ஆரத்தி: நவதானியங்களை தட்டில் பரப்பி நடுவில் தீபம் ஏற்றி ஆரத்தி எடுக்கலாம்.
மதுர ஆரத்தி: சர்க்கரையும், கல்கண்டும் வைத்து நடுவில் விளக்கு வைத்து ஆரத்தி எடுக்கலாம்.
அட்சதை ஆலம்: அட்சதை, மஞ்சள், குங்குமம் கலந்து இரு நிறங்களில் டிசைன் அமைத்து நடுவில் தீபம் வைத்து ஆரத்தி எடுக்க வேண்டும்.
எந்த ஆரத்தி எடுத்தாலும் துளி மஞ்சள் கலந்த அட்சதை என்னும் அரிசி இருக்க வேண்டும். ஆரத்தி எடுக்கும் போது பாட்டு பாடிக் கொண்டே மூன்று முறை வலப்பக்கமாக சுற்ற வேண்டும். ஆரத்தியில் இடும் நாணயங்களை எடுத்து பூஜை அறையில் வைத்திருந்து பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும்.