தேவையானவை:
இளநீர் -2
பால் - அரை லிட்டர்
சர்க்கரை -150 கிராம்
மில்க்மெய்ட் - 1 கிண்ணம்
சாரை பருப்பு - 1 மேஜைக்கரண்டி
முந்திரி - 10
பாதாம்- 10
பிஸ்தா- 10
ஏலக்காய்த் தூள் - 1தேக்கரண்டி
பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
நெய்- தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் பாதாம் மற்றும் பிஸ்தாவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். இளநீரை சீவி அதில் இருக்கும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். வழுக்கையை எடுத்து சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும். பின்னர், சிறிது வழுக்கையை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அதில் சிறிதளவு இளநீர் தண்ணியை ஊற்றி அதை நன்கு அரைக்கவும். பிறகு அதில் மீதமுள்ள இளநீர் தண்ணீரையும் ஊற்றி அதை மீண்டும் ஒரு முறை நன்கு அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
பின்னர், அடிகனமான பாத்திரத்தை மிதமான சூட்டில் வைத்து அதில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும். பால் நன்கு காய்ந்தவுடன் அதில் மில்க்மெய்டை விட்டு கிளறவும்.
பின்னர், சர்க்கரையைச் சேர்த்து கிளறவும். அத்துடன் ஏலக்காய்த் தூள் மற்றும் பச்சை கற்பூரத்தை சேர்த்து கிளறவும்.
பிறகு அதில் சாரை பருப்பு மற்றும் துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் மீதமுள்ள வழுக்கையைப் போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு கீழே இறக்கி ஆற விடவும். பின்னர், நெய்யை உருக்கி அதில் முந்திரி, பாதாம் வகையாறக்களைப் வறுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர், பால் ஆறியதும், அதனுடன் அரைத்து வைத்துள்ள இளநீர் வழுக்கை மற்றும் வறுத்த முந்திரியை சேர்த்து கலந்து விடவும். (பால் சூடாக இருக்கும் போது அரைத்த இளநீர் வழுக்கை அதில் சேர்த்தால் பால் திரிந்து விடும்.)