சாதாரணமாக மொழிமாற்றம் செய்யப்படும் படங்களில் பாட்டுகள் ஹிட்டாகாது. அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் "புஷ்பா' தெலுங்கு படம் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது. "புஷ்பா' படத்தில் வரும் "ஊ சொல்றியா மாமா... ஊங் ஊங் சொல்றியா மாமா' பாட்டு கேட்கும் போதே கிறங்கடிக்கிறது. காரணம், படத்தில் இந்தப் பாடலை ஆண்ட்ரியா மந்தகாசக் குரலில் பாடியிருப்பதுதான்.
இந்தப் பாட்டு ஒருசேர எல்லா மொழிகளிலும் ஹிட்டாகி இருப்பதுதான் ஆச்சரியம். அதற்கு காரணம் படத்தின் இசை. இசை அமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்திற்கு பாராட்டுகள் குவிகிறதாம்.
பெண்களை வேறு அர்த்தத்தில் நோட்டம்விடும் ஆண்களை நெருப்பு சொற்களால் பட்டவர்த்தனமாக விமர்சனம் செய்திருக்கிறது இந்தப்பாட்டு.
இப்பாடலைப் பற்றி ஆண்கள் சங்கம் கொதித்து கிளம்பியிருந்தாலும், "உண்மையைத் தானே பாடலில் சொல்லியிருக்காங்க' என்று சர்வசாதாரணமாகப் படத் தயாரிப்பாளரும் ஹீரோவுமான அல்லு அர்ஜுன் சொல்லிவிட்டார். சமீபத்தில் விவாகரத்து ஆன சமந்தா குறைந்த ஆடையில் பாடி ஆடுவதாக அமைந்திருக்கும் காட்சியும், "டோன்ட் கேர்' மனோபாவத்தில் இருக்கும் ஆண்ட்ரியா பாடியிருப்பதால் பாடலுக்கு ஒரு "பரபர' தொத்திக் கொண்டிருக்கிறது. மற்ற மொழிகளிலும் கவர்ச்சியாக ஆடியிருக்கும் சமந்தா மட்டுமே பேசு பொருளாகியிருக்கிறார்.
சமந்தா ஏற்று நடித்த முன்னைய கதாபாத்திரங்களில் சில, நாகாவின் விமர்சனங்களுக்கு காரணமாகியதும், சமந்தா தான் நடிக்கும் வேடங்களைக் குறித்து சமரசம் செய்து கொள்ளாததும் பிரச்னையை விவாக ரத்துவரை கொண்டு போயிருக்கலாம் என்று உணர்த்தும் பாடல்காட்சிதான் இது. எப்படி இருந்தாலும், "ஊ சொல்றியா மாமா..' பாடலுக்கு சமந்தா நடித்தது நாகாவைப் பிரிந்த பிறகுதான்!
இந்தப் பாடல், அதன் உள்ளடக்கம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பெண்ணியவாதியும், எழுத்தாளரும், ஒளி ஊடகரும், திரைப்படங்களுடன் இணைந்திருப்பவருமான முற்போக்கு எழுத்தாளர் கொற்றவை இடம் கேட்டோம்:
""பாடல் ரொம்பவும் நல்லா வந்திருக்கு. 5 மொழியிலேயும் கேட்டேன். எல்லாமே பிரமாதமாக இருந்தாலும், நம்ம ஆண்ட்ரியாவோட குரல் பாட்டை வேற லெவலுக்கு கொண்டுபோயிருக்கு. இசையும் டாப்.
ஒரு ஐட்டம் பாடலைப் போய் நல்லாருக்குன்னு சொல்றேனேன்னு பார்க்கிறீங்களா... அதுக்கு பாடலின் உள்ளடக்கம்தான் காரணம். ! இதுவரை "வெட்றா அவள...
குத்துறா அவள..' போன்ற பாடல்கள் பெண்களைக் கேலி கிண்டல் வசை பாடி வந்து கொண்டிருந்தன. அப்போதெல்லாம் எந்த ஆண் அமைப்புகளும் பொங்கி எழவில்லை. பெண் புத்தி பின் புத்தி என்று குறைத்து பேசும் எத்தனையோ கேலிகள், நகைச்சுவைகள். அதை எல்லாம் பெரும்பான்மை ஆண்கள் கொண்டாடத்தான் செய்கிறார்கள்.
"ஊ சொல்றியா மாமா.., பாடல் ஆண்களை வசைபாடுவதாக நான் பார்க்கவில்லை. பெண் உடலை எல்லா நேரமும் ஏதோ ஒன்று சொல்லி வகைப்படுத்துவதும், அந்த பெண்ணையே பார்வையால் துய்க்கும் ஆண்களையும், அவர்களின் பாசாங்கையும் கேலி செய்வதாகவே நான் கருதுகிறேன். எனவே தமிழ் பாடல்வரிகள் வரவேற்கத்தக்கது. இந்த வரிகளை எடுத்துவிட்டு வேறு வரிகளை போட்டிருந்தாலும் பாடல் ஹிட்டாகியிருக்கும். அந்த அளவுக்குப் பாடலின் இசை அட்டகாசமாக அமைந்திருக்கிறது .
எத்தனை ஆண்களைப் பார்த்திருப்பேன் என்னும் பொருளில் அந்தப் பெண் பாடுகிறார் '' என்றார் அவர்.