மலைவா ழைக்குப் பெயர்பெற்ற
வளமை நிறைந்த திண்டுக்கல்
புலத்துப் பக்கம் தோமையார்
புரத்துக் கிழக்குக் குடியிருப்பாம்!
குடிஇ ருப்பின் அருகினிலே
கூவிக் கொண்டு தொடர்வண்டி
தடதட என்றே செல்கின்ற
தண்ட வாளப் பெரும்பாதை!
மதுரை விட்டுச் சென்னைக்கு
வைகை விரைவுத் தொடர்வண்டி
அதிக வேகம் சென்றதுவாம்
அந்தப் பாதை கெட்டதுவாம்!
பிளவுப் பட்டுத் தண்டவாளம்
பெயர்ந்து கெட்டுப் போனதிலே
அளவில் லாத பேரொலிதான்
அங்கே எழுந்து வந்ததுவாம்!
இருப்புப் பாதை ஓரத்தில்
இருந்த சிறிய வீட்டிற்குள்
மருது பாண்டி யன்என்னும்
மாண வன்தான் திடுக்கிட்டான்!
எட்டாம் வகுப்புப் படிக்கின்ற
ஏழை மருது பாண்டியன்தான்
கிட்டே சென்று தண்டவாளம்
கெட்டுக் கிடந்த நிலைகண்டான்!
கண்டு மருது பாண்டியன்தான்
கவலை கொண்டு நிற்கையிலே
திண்டுக் கல்லில் இருந்துதெற்கே
செல்லும் வண்டி வந்ததுவே!
அந்த நேரம் அப்பையன்
அதிக மாக மனந்துடித்தான்
வந்த வண்டி தனைக்காக்கும்
வகையை எண்ணித் தவித்திட்டான்!
அங்கி ருந்து வீட்டுக்குள்
அடுத்த நொடியில் ஓடியவன்
தங்கை சிவப்புச் சிறுசட்டை
தன்னைக் குச்சி தனிலிணைத்தான்!
அங்கே வண்டி வருமுன்னே
அமைத்த சிவப்புக் கொடிதன்னை
இங்கும் அங்கும் ஆட்டிநின்றான்
எதிரே வந்த தொடர்வண்டி,
விபத்துக் குள்ளே மாட்டாமல்
மெல்ல வந்து நின்றதுவாம்
உபகா ரத்தைச் செய்தவனோ
உள்ளம் மிகவும் மகிழ்ந்திட்டான்!
அருகே வாழும் மக்களெல்லாம்
அங்கே கூடி வியப்புடனே
மருது பாண்டி யனைவாழ்த்தி
வழங்கி னார்கள் பாராட்டும்!
அவனை ஈன்ற பெற்றோரும்
அளவில் லாமல் மகிழ்ந்தார்கள்!
இவனைப் பெறவே இவன்பெற்றோர்
என்ன தவந்தான் செய்தாரோ?
என்றே கூடி இருந்தோரின்
இதயம் எல்லாம் பேசினவாம்
அன்றே செய்தி அரசுக்கும்
அனுப்பி வைக்கப் பெற்றதுவாம்!
வீர தீர செயலுக்கு
விருதை நடுவண் அரசிடத்தில்
பாராட் டுடனே அம்மருது
பாண்டி யன்தான் பெற்றானாம்!
தங்கத் தம்பி தங்கைகளே
தயக்கம் இன்றி உதவுங்கள்
உங்கள் வாழ்வும் மேலோங்கும்
உலகே உம்மைப் பாராட்டும்!
(உண்மை நிகழ்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டது)