பாலில் புதிய மோரை விடுதல் பிரை-ஏறிப்
பார்த்தால் வியக்கவைக்கும் ஏரி கரை!
மேலும் மேலும் கரையை மோதும் திரை-தீனி
மிகத் தின்றால் உணவில்லை! அதுதான் இரை!
பாலென்னும் பாட்டின் பொருள் விளக்கம் உரை-துள்ளிப்
பாய்ந்தோடும் மானின் ஒருவகையே மரை!
ஆவென்னும் பசுக்களின் கூட்டமே நிரை-ஓர்
ஐந்துமரக்கால் நெல்லின் அளவே பரை!
நீர்க்குமிழித் தொகுதியே வெள்ளை நுரை-பூமி
நிலத்துக்கு மற்றும் ஒரு பெயரோ தரை!
கீர்த்தியுடன் வாழுகின்ற தலைவன் துரை-உடலில்
கெட்ட குருதி ஓடும் நரம்போ சிரை!
கூரைமேல் படருகின்ற கொடியோ சுரை-இரு
கூறுபோட்டுப் பிரித்த ஒரு பாதியே அரை!
ஊரைப் பகைத்திருக்கும் குற்றமே புரை-என்றும்
ஓங்குதமிழ் வாழும் வையம் உள்ள நாள் வரை!