அழகு முல்லை அரும்பிதழ்
அவிழ மணம் கமழுமே
பழகு தமிழைப் பேசிடும்
பாப்பா பேச்சும் மணக்குமே!
கொஞ்சிப் பேசும் கிளியிடம்
குழைந்து மக்கள் பேசுவார்
அஞ்சும் வகையில் அலறிடும்
ஆந்தையை யார் விரும்புவார்?
பிறரின் நெஞ்சம் புண்படப்
பேசு கின்ற போதிலே
உறவு கெட்டுப் போய்விடும்
உள்ளம் அதனால் வாடிடும்!
கனியை விட்டுக் கசந்திடும்
காயை வீணில் கடிப்பதோ?
இனிய சொற்கள் இருக்கையில்
இழிந்த வார்த்தை உரைப்பதோ?
அன்பு கொண்டு நீயுமே
இதம் பதமாய்ப் பேசினால்
கொடிய மனிதர் ஆயினும்
கருணை கொண்டு பழகுவார்!
நயம் மிகுந்த பேச்சினால்
நாளும் நாளும் வாழ்விலே
கொஞ்சம் கூடப் பகைமையே
கூடிடாமல் நலம் மிகும்!