ஆசிரியர் தினமாம் இன்றாகும்
அனைவரும் அறிதல் நன்றாகும்
மாசிலா மனத்தை கொண்டவராம்
மரியாதை மதிப்பும் மிக்கவராம்!
பாடம் வகுப்பில் எடுத்திடுவார்
பாங்காய் வினாவும் தொடுத்திடுவார்
ஆடல் கலைகள் வளர்த்திடுவார்
அச்ச நிலையை தவிர்த்திடுவார்!
உள்ளம் உயர வழிவகுப்பார்
ஊக்கம் நிரம்ப ஊட்டிடுவார்
கள்ளம் கபடம் அகற்றிடுவார்
கண்ணாய் கல்வி புகட்டிடுவார்!
நெஞ்சில் நிலைக்க பாடத்தை
நித்தம் அழகாய் நடத்திடுவார்
கொஞ்சும் தமிழும் ஆங்கிலமும்
குன்றா கணக்கும் போதிப்பார்!
நட்பின் பெருமை எடுத்துரைப்பார்
நன்மை விதைக்க செய்திடுவார்
எட்டுத் தொகையை இனித்திடவே
ஏற்ற வகையில் ஓதிடுவார்!